நல்ல தமிழ் கற்போம்!
இணைச்சொற்கள்.
1. “எட்டுக்கும் எழவுக்கும்
(இழவுக்கும்)”.
எட்டு = இறந்தார்க்கு, எட்டாம்நாள் செய்யும் கடன்.இழவு = இறந்தார்க்கு, பதினாறாம்நாள் செய்யும் கடன்.
“எட்டுக்கும் சேர்வான்; இழவுக்கும் சேர்வான்”, என்பது சொலவடை. எட்டாம்நாள் கடன்செய்வார் தாய்வழியார். பதினாறாம்நாள்கடன் செய்வார் மாமன்வழியார். இரண்டுக்கும் கூடுவாரென்பது முறைபிசகைச்சுட்டுவதாம். கூடத்தகாத இடத்துக்கூடும் இயல்பினை இவ்வாறு சுட்டுவது வழக்கு. தனக்கென்று எவ்வொரு திட்டமும்கொள்கையும் இல்லாமல், எங்கேயும் சேர்த்து எப்படியும் வாழ்வாரை இழித்துரைப்பதற்கு இச்சொலவடையை ஆள்வர்.
2. “எடுப்பும் தொடுப்பும்”.
எடுப்பு = ஒருவினாவை எழுப்புவது அல்லது ஒருபாடலின் முற்பாதியை இயற்றுவது.தொடுப்பு = எழுப்பிய வினாவுக்கு தொடுத்து விடைதருவது அல்லது பாடலுக்குரிய பிற்பாதியை தொடுத்து இயற்றுவது.
எடுப்பு – முற்பட எடுப்பது; தொடுப்பு – எடுப்புக்கேற்ப உடனே முடிப்புத்தருவது. வினாவிடைப்பாடல்கள், விடுகதைப்பாடல்கள், மனக்கணக்குகள் என்பனவெல்லாம் எடுப்புதொடுப்புகளாக நிகழ்த்தப்படுவதுண்டு.
பொன்னுசாமித்தேவரும் முத்துராமலிங்கசேதுபதியும் வினாவிடைவெண்பாக்களை எடுப்புமுடிப்பாகப்பாடினர்.
“இன்னவாறு தொடங்கி, இன்னவாறு முடிக்கவேண்டும்”, என்றவாறு ஒருவரே எடுத்துமுடிப்பதும் உண்டு. கவி காளமேகம் கேட்டவாறெல்லாம் பாடினார்.
3. “ஏழை பாழை”.
ஏழை = வறுமையாளி.பாழை = வெறுமையாளி.
பாழ் – வெறுமை; பாழ் என்பது பழைமையான சொல்; வெற்றிடமாம் வான்வெளியை பாழெனக்கூறும் பரிபாடல்.
‘பாழாய்ப்போன பாவி’, ‘பாழும்பழியும்’ என்பன வசையுரையும், இணைச்சொற்களுமாம். ஏழைபாழைக்கு உதவுதல் வேண்டுமென்பது அறிவுரை.
வறுமையென்பது இன்மை எனினும், முழுவதும் இன்மையன்றாம். ஆனால், பாழ் என்பது அறவே இன்மையாம்.
முதுபெரும்புலவர் திரு இரா. இளங்குமரன் அவர்களது “இணைச்சொல்லகராதி” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)
முந்தைய பதிவுகள்:
பாகம்-1, பாகம்-2, பாகம்-3, பாகம்-4, பாகம்-5, பாகம்-6,பாகம்-7, பாகம்-8,பாகம்-9, பாகம்-10,பாகம்-11














