“சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்” என்பது முதியோர் வாக்கு.
பேசும் போது இலக்கணச் சுத்தமாக பேச இயலாவிடிலும், எழுதும் போது பழுதற்ற தமிழில் எழுதப் பழகலாமே என்கிற எண்ணத்தை ஊக்குவிக்க தமிழ்ச் சொற்களின் பயன்பாடு குறித்து இந்த கட்டுரை பேசுகிறது..
இரண்டு தமிழ்ச் சொற்களை சேர்த்து எழுதும் போது நம்மையுமறியாமல் பிழைகள் நேர்ந்து விடுகின்றன.
ஒற்று மிகுமா மிகாதா, என்கிற வினாவும், இரு சொற்களை சேர்த்து உச்சரிப்பது சரிதானா என்கிற ஐயமும் தோன்றுகின்றன. ஏற்கனவே பலர் எழுதுவதை பார்த்துக் கேட்டு நாமும் அந்த சொல்லாட்சி சரியே என்று எண்ணிவிடுகிறோம். பெரும்பாலானவை பிழையாகவே அமைந்து விடுகின்றன.
அந்த வகையில் சில சொற்கள் பற்றி காண்போமா?
“மனதில்” என்கிற சொல்லாட்சி சரிதானா?
மனதிலே ஒரு பாட்டு, மழைவரும் அதைக் கேட்டு என்ற திரைப்பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறோம். ஒரு தமிழ் தெரிந்த கவிஞர் இந்த பாடலை எழுதியிருக்கிறார். அந்த நம்பிக்கையில் மனதில் என்பது சரியான சொல்லாட்சி என்று நம்புகிறோம். ஆனால் அது பிழையான சொல்லாட்சி ஆகும்.
எப்படி என்பதை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுக்களுடன் பார் ப்போம்.
மரம் + இல் = மரத்தில்,
பணம் + இல் = பணத்தில்,
வனம் + இல் = வனத்தில்,
பழம் + இல் = பழத்தில்.
இப்படித்தான் சொல்கிறோம்; எழுதுகிறோம். வல்லின தகரவொற்றை (த்), மிகுத்தே பேசுகிறோம்; எழுதுகிறோம்.
ஆனால், மனம் + இல் = மனதில் என்று பேசுகிறோம்; எழுதுகிறோம். இது தவறல்லவா? இங்கும் வல்லின தகரவொற்றை (த்), மிகுத்தே பேசவும், எழுதவும் வேண்டும்.
மனத்தில் என்பதே சரி. இதை நாம் மனத்தில் பதியவைக்கவேண்டும்.
அடுத்து நாம் காணப்போகும் சொல்: பதட்டம்.
‘பதட்டம்’ என்றவொரு சொல் தமிழிலுள்ளதா?
‘பதறு’, ‘பதறுதல்’, ‘பதற்றம்’ என்றால் ‘ஆத்திரமடைதல்’, ‘கலக்கமடைதல்’ என்னும் பொருள்களைக்குறிக்கும்.
பதட்டம் என்னுஞ்சொல்லை பேச்சுவழக்கில் நாம் பயன்படுத்திவர, அது மெல்லமெல்ல எழுத்துத்தமிழிலும் ஏறிவிட்டது.
இனிநாம் ‘பதற்றம்’ என்னும் சொல்லையே ஆளவேண்டும்.
அடுத்து இன்னுமொரு சொல்லைக் காண்போமா?
நடப்பாண்டு
இச்சொல் பரவலாக ஒலிபரப்பப்படுவதை அனைவருமறிவர். இதில் அமங்கலப்பொருளும் உண்டென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
மரணமடைந்தால் இறுதிநாள்காரியத்திற்கு முன்னாளிரவு ‘நடப்பு’ என்றொரு கருமகாரியம் நடைபெறுமல்லவா? ஏனிந்த அமங்கலம்?
இதனைவிடுத்து, ‘நிகழ் ஆண்டு’, ‘நிகழும் ஆண்டு’ எனக்கூறுவது நன்றாயிருக்குமே. அழைப்பிதழ்களில் பன்நூறாண்டுகளாக ‘நிகழும் ஆண்டு’ என்றே குறிப்பிடப்படுவதை எண்ணிப்பார்க்கவேண்டும். ‘இவ்வாண்டு’ என்றும் சொல்லலாமே.
முனைவர் திரு முத்து கண்ணப்பன் அவர்களது நல்லதமிழ் அறிவோம்” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.













