நல்ல தமிழில் பேச, படிக்க, எழுத ஆர்வம் உள்ளவரா நீங்கள்???? ஆம், எனில் இந்த தொடரில் வரும் தகவல்களை படித்து பழகுங்கள்.
தொடரின் அடுத்த தொகுப்பு இதோ:-
அன்று/அல்ல – இல்லை”.நாம் குறிப்பிடும் பொருள்கள் இல்லாமல், அவற்றுக்கு பதிலாக வேறுபொருள்கள் இருக்கின்றன என்னும் நிலைமைகளில் அன்று/அல்ல என்னுஞ்சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும்.
எடுத்துக்காட்டாக, “அது கண்ணன் படம் இல்லை; முருகன் படம்”. படம் இல்லை என்றுசொன்னால், படம் என்பதாக எதுவும் இல்லையென்றுதானே பொருள். படமாக இல்லையென்று சொன்னபிறகு, முருகன் படம் இருக்கிறது என்பது முரணல்லவா? ‘படம் இல்லை’ என்றால் வேறு ஏதோவொன்று இருக்கலாம். ஆனால் நாம் அப்படியா சொல்ல நினைக்கிறோம். இல்லையல்லவா!
இந்த வாக்கியத்தை வாசியுங்கள் : “அது கண்ணன் படம் அல்ல; முருகன் படம்”. அங்கே படம் ஒன்றிருக்கிறது. அதில் இருப்பது கண்ணன் அல்ல என்ற பொருள் தெளிவாக வெளிப்படுகிறது அல்லவா? அடுத்துவரும் வாக்கியப்பகுதியான ‘முருகன் படம்’ என்பது நமது ஐயத்தை நீக்கி பொருளையும் முரணில்லாமல் முற்றுப்பெறவைக்கிறது. நாம் சொல்லவந்ததும் இதைத்தானே!
ஆகவே, ஒன்றின் வேறுபாட்டை தெரிவிக்க ‘அல்ல’ என்னுஞ்சொல்லை ஆளவேண்டும். ‘இல்லை’ என்னுஞ்சொல் ஒன்றின் இருப்பின்மையை தெரிவிக்க பயன்படுத்தப்படவேண்டும்.
“மற்றும்”.
இச்சொல் அண்மைக்காலத்தில், ஆங்கிலச்சொல்லான and என்பதன் நேர்பொருள் தரும் சொல்லாக, மிகப்பரவலாக வழங்கப்படுகிறது. ஒன்றுக்கும்மேற்பட்ட சொற்களை, பொருள்களை, பெயர்களை, தொடர்களை இணைக்குஞ்சொல்லாக, இந்த ‘மற்றும்’ என்னுஞ்சொல் இப்போது வழக்குக்கு வந்துள்ளது.
‘மீண்டும்’, ‘பின்னும்’, ‘மேலும்’, ‘பிறவும்’, ‘மறுபடியும்’ முதலியன ‘மற்றும்’ என்னுஞ்சொல்லின் பொருள்கள். இதனை நன்கு புரிந்துகொள்ளாமல், தமிழ் ‘உம்’மையை ஆளாமல், ‘மற்றும்’ என்னுஞ்சொல்லையே பயன்படுத்துகிறார்கள். இந்நிலை நீடித்தால் தமிழின் ‘உம்’மை வழக்கொழிந்துபோகும்.
மற்றும் என்னுஞ்சொல்லாட்சியை நீக்கும் சிலவழிமுறைகளைக்காண்போம்.
1) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள். (தவறு).அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும். (சரி).
2) நூலகம் மற்றும் அறிவியல்பிரிவுகளை பார்வையிட்டனர். (தவறு).நூலகத்தையும் அறிவியல்பிரிவுகளையும் பார்வையிட்டனர். (சரி).
3) ஆங்கிலம் மற்றும் இந்தி நேர்முகவருணனை. (தவறு).ஆங்கிலம், இந்தி நேர்முகவருணனைகள். (சரி).
4) பாறை மற்றும் ஊற்றுகளிலிருந்தும்….. (தவறு). பாறையிலிருந்தும் ஊற்றுகளிலிருந்தும்…… (சரி). அல்லதுபாறை, ஊற்றுகள் ஆகியவற்றிலிருந்து……. (சரி).
5) தமிழ்நாடு, கருநாடகம் மற்றும் கேரளம். (தவறு). தமிழ்நாடு, கருநாடகம், கேரளம் ஆகியவை. (சரி).
ஒவ்வோர்மொழிக்கும் ஒவ்வோர் மரபுண்டு. பிறமொழிமரபை தமிழ்மொழிநடையில் புகுத்துவது ஏற்கத்தக்கது இல்லை. தமிழ்மொழி மரபைக்காப்போம்.
முனைவர் திரு முத்து கண்ணப்பன் அவர்களது “நல்லதமிழ் அறிவோம்” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)














