வாங்க தமிழ் கற்கலாம்…
இணைச்சொற்கள்.
1. “அடியோலை அச்சோலை”.அடியோலை = முதற்கண் எழுதப்பட்டவோலை அல்லது மூலவோலை.அச்சோலை = மூலவோலையை பார்த்தெழுதப்பட்ட ‘படியோலை’.
‘அடி’ என்பது ‘மூலம்’ என்று பொருள்படுவதை, அடிமனை, அடிப்பத்திரம் என்பனவற்றில் அறியலாம்.
மூலத்தில் உள்ளதுள்ளபடி படியெடுப்பது அச்சோலையாம். “மூட்சியில் கிழித்தவோலை படியோலை, மூலவோலை மாட்சியிற் காட்டவைத்தேன்” (பெரியபுராணம், தடுத்தாட்கொண்டபடலம் 56) எனவருவதில் சுட்டப்படும் படியோலை, அச்சோலையாம்.
அச்சடிச்சீலை, அச்சுவெல்லம், வார்ப்பட அச்சு என்பவற்றைக்கொண்டு, ‘அச்சு’, ‘படி’ எனும்பொருள்படுவதை அறிக.
2. “அக்குவேறு, ஆணிவேறு”.
அக்கு = முள்.ஆணி = காலடியில் தோன்றிய கட்டி.
முள்தைத்து அஃது எடுக்கப்படாமலே நின்றுபோனால், அவ்விடம் கட்டிப்பட்டு கல்போலாகி காலையூன்றமுடியா வலிக்கு ஆளாக்கும். பின்னர், அவ்விடத்தை அகழ்ந்து கட்டியையும் முள்ளையும் அகற்றுதலுண்டு.
அதனை ‘ஆணிபிடுங்குதல்’ என்பர். ‘காலாணி எடுக்கப்படும்’ என விளம்பரம் செய்துக்கொண்டு வீதியோரங்களில் இருப்பாரை நகரப்பகுதிகளில் காணலாம். இதேபோல் கூவிக்கொண்டு தெருக்களில் வருவாரையும் காணலாம்.
அக்கமணி = முள்மணி.அக்கம் = முள்.”அக்குவேறு ஆணிவேறாகப்பிடுங்குதல்” என்பது வழக்கு.
3. “அடுத்தும்தொடுத்தும்”.
அடுத்தல் = இடைவெளிபடுதல்.தொடுத்தல் = இடைவெளிபடாமை.
அண்டைவீடு, அடுத்தவீடு என்பனவும், அண்டியவர், அடுத்தவர் என்பனவும் கொண்டு ‘அடுத்தல்’ பொருளையறிக.
தொடர், தொடர்ச்சி, தொடர்பு, தொடலை, தொடர்வண்டி, தொடர்பொழிவு இவற்றால் ‘தொடுத்தல்’ பொருளையறிக.தொடலை = மகளிர் விளையாட்டு.
“அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்பருவத்தால் அன்றிப் பழா” – மூதுரை.பழா = பழுக்காது.
முதுபெரும்புலவர் திரு இரா.இளங்குமரன் அவர்களது “இணைச்சொல்லகராதி” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)
முந்தையப் பதிவுகள்:













