தொடர்ந்து கல்வி கற்றல் மற்றும் பயிற்சி பெறுதல்
கடந்த நான்கு பாகங்களில் கூறப்பட்ட அனைத்து நிர்வாகத் திறனையும் சரிவரச் செயல்படுத்தத் தொடர்ந்து அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் (Continuous Training and Practice) என்று நவீன மேலாண்மைப் பாடம் வலியுறுத்துகிறது . இதனை ஆண்டாள் நாச்சியார் நான்காவது பாசுரத்தின் மூலம் விளக்கியுள்ளாள்
ஆண்டாள் நான்காவது பாசுரத்தில், கடல்நீர் சூரியனின் கதிர்வீச்சில் ஆவியாகி, கறுத்த மேகம் உண்டாகி, மின்னல் இடியுடன் கூடிய மழை பொழியும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் “விஞ்ஞானத்தை மெய்ஞானத்துடன் கலந்து” கொடுத்த அற்புதமான பாசுரம்.
இந்த பாசுரத்தில் தமிழ் மொழியின் சிறப்பு எழுத்தான “ழ” சப்தத்தை, ஒவ்வொரு வரியிலும் ஆண்டாள் உபயோகித்திருப்பது, பாசுரத்தின் சிறப்பு மற்றும் ஆண்டாளின் தமிழ்ஞானம் புலப்படும்.
ஒரு திட்டம் சரிவரச் செயல்பட, அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து காலம் தவறாமல் பயிற்சி அளிக்க வேண்டும். புதிய தொழினுட்பங்களை ஆழமாகக் கற்று, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது உறுப்பினர்களிடையே அறிவுத்திறன் ஒலி மிகுந்து, முகம் மின்னல் போல் பளிச்சென, தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். ஒரு நிறுவனத்திற்கு உறுப்பினர்களின் அறிவுத்திறன், பயிற்சி மிகவும் முக்கியமாக் கருதப்படுகிறது.
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
“ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி” என்பது தொடர்ந்து காலம் தவறாமல் நடக்கக்கூடிய செயல். அதேபோல் தொடர்ந்து காலம் தவறாமல் ஆழ்ந்து ஒரு
விசயத்தைப் படித்து (Optimising the knowledge OR Potential) அதனைமுதலில் தன்னிடையே கிரகத்துக் கொள்ளவேண்டும் என்று இந்த பாடலின் மூலம் ஆண்டாள் தெரிவிக்கிறாள்.
அறிவுத்திறன் வளரும் பொழுது, ஒருவருடைய முகம் மின்னல் போல் பளிச்சென இருப்பதையும் , அதன்மூலம் எதிர்க்கருத்து உடையவர்களைத் தான் பெற்ற அறிவுத்திறனின் மூலம் பொடி பொடியாக்குவதையும் ஆண்டாள், “ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து” என்று குறிப்பிட்டுள்ளாள். (Sound Knowledge will lead to confidence and shining)
இந்த அறிவுத்திறன் மூலம் தன்னம்பிக்கை வளர்ந்து, செயல் வேகமாகவும் சரியான திசை நோக்கிச் செல்லும் என்பது நிதர்சனமான உண்மை. இதனை ஆண்டாள் இந்தப் பாடலில் “தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்” என்று குறிப்பிடுகிறாள்.
வில்லிலிருந்து எய்யப்பட்ட அம்பு, அதன் குறிக்கோளை அடைந்து தாக்கும் என்று குறிப்பிட்டு, அதேபோல் அறிவுத் திறன் பெற்றவர்கள், எடுத்துக் கொண்ட. குறிக்கோள் நிறைவேற, முழுத்திறனயும் சரமழை போல் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறாள். ( Utilising the knowledge OR Potential)
அறிவுத் திறன் கொண்டு செல்வம் பெருக்கி இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழமுடியும். கல்விச் செல்வம் அழியாச் செல்வம். கல்விச் செல்வம் மூலம், மற்ற செல்வங்களை எல்லாம் எளிதில் பெற்றுவிட முடியும்.
இந்த ஒரு செல்வம் மட்டும், கொடுக்க கொடுக்க வளரும் செல்வம், மற்றவர்கள் பறிக்க முடியாத செல்வம். இதனை ஆண்டாள் இந்த பாடலில் “வாழ உலகினில் பெய்திடாய் “ என்று குறிப்பிடுகிறாள்.
இந்த பாடலின் மூலம் “ தொடர்ந்து காலம் தவறாமல் ஆழ்ந்து படித்து பயிற்சி எடுத்தால் அறிவுத் திறன் மின்னல் போல் பளிச்சென வேகம் போன்று வளரும், இத்துடன் தன்னம்பிக்கையும் வளரும். முழுத்திறனையும் சரிவரச் செயல்படுத்தினால், எடுத்துக் கொண்ட குறிக்கோள் நிறைவடையும். அறிவுத்திறன் மூலம் உலகில் நன்றாக வாழ முடியும் ” என்ற கருத்துகளை ஆண்டாள் நாச்சியார் அழகாக எடுத்துக் காட்டியுள்ளாள்.
(Deep learning and updating the technology on time continuously will earn enormous knowledge and self confidence , will lead to refined and prosperous target output through utilising the learned knowledge . Sound Knowledge will always provide all wealth in individual life)
(தொடரும்)
முந்தையப் பதிவுகள்:













