அமெரிக்காவில், ஜார்ஜ் ஃப்லாயிட் என்ற கறுப்பரைக் போலீஸ் கொன்றதால், இடது சாரிகள் ஊக்குவித்த கலவரம் சில வாரங்கள் தொடர்ந்தது. ஜார்ஜ் ஃப்லாயிட் ஒரு தொடர்-குற்றவாளி. சில வருடங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளி வந்தவன். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த குற்றத்திற்காகச் சிறை சென்றவன். அவன் எப்படிப்பட்ட குற்றவாளியாக இருப்பினும், போலீஸ் அவனை நடத்திய விதம் சட்டப்படி தவறு. கொலைக்குக் காரணமான அதிகாரி சட்ட நடவடிக்கையைச் சந்திக்க வேண்டும் என்பதில் இரு கருத்தில்லை.
கலவரத்தைத் தொடர்ந்து, இனங்களுக்கிடையே உள்ள உறவு பற்றியும், எப்படி கறுப்பினத்தவர் தொடர்ந்து நசுக்கப் படுகின்றனர் என்றும் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன; விவாதங்களும் தொடர்கின்றன.
இந்த விஷயத்தில் கேடென்ஸ் ஓவென்ஸ் என்ற கறுப்பினப் பெண்ணின் காணொலி முக்கியத்துவம் பெறுகிறது.
கேடன்ஸின் வாதம் – “கறுப்பின மக்களின் துன்பத்திற்குப் பெருமளவிற்கு கறுப்பினத்தவரே காரணம். போலீஸால் கொல்லப் பட்ட கறுப்பினத்தவர் செய்திகளில் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், அதைப்போலப் பல மடங்கு கறுப்பினத்தவர், அந்த இனத்தினராலேயே கொல்லப் படுகின்றனர். இது செய்தியாவதில்லை. மேலும் கறுப்பினத்தவர்கள், ஒரு தொடர் குற்றவாளியான ஜார்ஜ் ஃப்லாயிடைத் தங்கள் ஆதர்சமாகக் கொள்வது தவறு. குடும்பத்திலும், சமூகத்திலும் பொறுப்புடன் நடந்து கொள்பவர்களைத் தான் ஆதர்சமாகக் கொள்ளவேண்டும்.”
இந்த வாதம், இடது சாரிகளிடமும், கறுப்பினத்தவரைப் பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரித்து வியாபாரம் நடத்துபவர்களிடமும் செல்லுபடியாகவில்லை. சட்ட நடைமுறைகளும் புள்ளி விவரங்களும் கறுப்பினத்தவர்கள் பாதிக்கப் பட்டவர்கள் என்று திட்டவட்டமாகக் கூறுகின்றன என்பது அவர்கள் வாதம்.
இந்த இடத்தில் ‘பாதசாரி உவமை’ என்று ஒன்றை அறிமுகப் படுத்துவோம். சட்ட நிபுணர், கல்வியாளர், நரம்பியல் நிபுணர் என்ற பல தகுதிகளை உடைய ஏமி வாக்ஸ் என்பவர் கூறிய உவமை – பாதசாரி உவமை.
அதன்படி பாதசாரி ஒருவன் மீது ஒரு டிரக் ஏறிவிடுகிறது. தீவிரமாகப் பாதிக்கப் பட்ட பாதசாரி, மீண்டும் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். டிரக் ஓட்டுநர் பாதசாரியின் மருத்துவக் கட்டணங்களை ஏற்றுக்கொள்கிறார், ஆனால் பாதசாரி மீண்டும் நடக்கவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, அவர் முயன்றால் மட்டுமே சாத்தியம். பாதசாரி மீண்டும் நடக்கக் கற்றுக் கொள்ளும் வரை அவருக்கு நீதி கிட்டவில்லை என்பதால், டிரக் ஓட்டுநர் இன்னும் அதிகம் உதவ வேண்டும் என்று வலியுறுத்தலாம். ஆனால் சோகமான உண்மை என்னவென்றால், இந்த வாதத்தின்படி நீதிக்குச் சாத்தியமே இல்லை. ஆப்பிரிக்க அடிமைகளாக அமெரிக்காவில் வாழத் தொடங்கியவர்களின் சந்ததியினரின் வரலாறு, எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும், அவர்களும் முயன்றாலன்றி அவர்கள் நிலையை வேறு யாராலும் மாற்ற முடியாது. அவர்கள் தான் மாற்றவேண்டும் என்றில்லை; ஆனால் அவர்களால்தான் மாற்ற முடியும் என்பது தான் நிலை.
எமி மாக்ஸ் நிற வெறியர் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், கறுப்பின சிந்தனையாளர்கள் பலர் இந்த உவமையை ஒப்புக் கொள்கின்றனர்.
கோல்மன் ஹியூஸ் என்ற கறுப்பின இளைஞரின் சிந்தனையும் இதை ஒட்டியே உள்ளது.
கேடென்ஸ் ஓவென்ஸ், கோல்மன் ஹியூஸ் போன்றவர்கள் கறுப்பினத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.
கறுப்பின சிந்தனையாளர்களான தாமஸ் சொவெல், வால்டர் வில்லியம்ஸ் போன்றவர்கள், குறைந்த பட்ச ஊதியம், வேலையற்றோருக்கு உதவித் தொகை போன்ற பொருளாதாரக் கொள்கைகளைக் கறுப்பினத்தினர் பின் தங்கியதற்குக் காரணமாகக் கூறுகின்றனர்.
குறைந்த பட்ச ஊதியம் கட்டாயமாக்கப் படாத காலத்தில், கறுப்பின இளைஞர்கள், படிக்கும்போதே குறைந்த ஊதியத்தில் ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ள வாய்ப்பிருந்தது. குறைந்த பட்ச ஊதியம் கட்டாயமாக்கப் பட்டபின், பெருவாரியான இளைஞர்கள் ஒரு திறனையும் பெறாமல் கல்லூரிக்கும் செல்லாமல் பல இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்கின்றனர்.
அரசு தரும் உதவித் தொகை, குடும்ப அமைப்பைச் சிதைத்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் பிள்ளைகளைப் பெறுவது, பதின்வயதில் கர்ப்பம், ஒரு பெற்றோர் வீடுகள் என்று ஆரோக்கியமற்ற சூழல் அமெரிக்காவுக்கே பிரச்சினையாக இருக்கும்போது, கறுப்பரினத்தை அது அதிகம் பாதிப்பதாகக் கூறுகின்றனர்.
வெளிப்படையாக நிற வெறி நிலவிய காலத்தை விட, சமூக நீதி மேம்பட்ட காலத்தில் கறுப்பர்களின் நிலை மோசமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.
கறுப்பினத்தவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களுடைய பொறுப்பு பற்றிய வாதத்தைத் தொடர்வோம்.
அடையாளம் சார்ந்த பாகுபாடுகள் மாற, அடையாளத்தைச் சுமப்பவர்களுக்குப் பொறுப்பு உள்ளது. அமைப்பிலேயே நிறவெறி இருந்த காலம் ஒன்று இருந்தது. அந்த நிலை மாறியுள்ளது. இப்போதுள்ள நிலையைத் தனி மனித நிறவெறி நிலவும் காலம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். இதைத் தடுக்கவோ, நடந்தால் தண்டிக்கவோ முயலலாம்; ஆனால் ஒட்டு மொத்தமாக அதை ஒழிப்பது சாத்தியமில்லை.
கறுப்பரின சிந்தனையாளர்களும், கேடன்ஸ் போன்ற இளைஞர்களும் கறுப்பர்கள் பெரும் சலுகைகள் இன்றி, பிறருடன் போட்டியிடுவதும், பொறுப்புடன் நடந்து கொள்வதுமே அவர்களுடைய நிலை மேம்பட உதவும் என்று நம்புகின்றனர்.
இடது சாரிகளும், லிபரல்களும் வளர்த்து விடும் கண்ணோட்டம், பின் தங்கிய கறுப்பினத்தவர் தம்மை எப்போதும் பாதிக்கப் பட்டவர்களாக நினைத்துக் கொள்வது. கறுப்பினத்தவர்களின் கடமைகளை வற்புறுத்தும் கேடென்ஸ் போன்றவர்களை எதிரிகளாகவும், லிபரல்களை நண்பர்களாகவும் நடத்துவர். இந்த நிலையிலிருந்து மீள்வது மிகக் கடினம். டெமாக்ரேட் கட்சிக்கு வாக்கு வங்கியாக ஒரு கூட்டமும், வன்முறைக்கும், போதைக்கும் அடிமையாகவும் ஒரு கூட்டம் என்று காலமெல்லாம் தொடரும்.
அமெரிக்காவின் கறுப்பர் இனம் மட்டுமல்ல; எங்கெல்லாம் ஒரு சமூகம் தன்னை பாதிக்கப் பட்டது என்று நம்புகிறதோ, அந்த சமூகம் தன்னைப் பாழடித்துக் கொண்டு, பிறருக்கும் தொல்லையாக இருக்கும். இதனால் பயன் பெறும் கூட்டம் இடது சாரிகள் போன்ற அரசியல் கட்சிகள் மட்டுமே.














