கொரோனா பொது முடக்க காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களின் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு, கடன், வட்டி சுமையும் அதிகரிக்கும். பலரும் இதை சுட்டிக்காட்டிய பின்புமே கூட காதே இல்லாதவரின் முன்பு ஊதப்பட்ட சங்கு என்றே இது இருந்து வந்தது.
இனியும் சாமானிய மக்களின் வேதனையை உணர மறுக்கும் இந்த அரசை நம்பிப் பயனில்லை என்ற சரியான முடிவை எடுத்த கஜேந்திர சர்மா என்ற நல்ல மனிதர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தள்ளி வைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு மீண்டும் வட்டி விதிப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று விசாரணைக்கு இந்த வழக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் தள்ளி வைக்கப்பட்ட தவணைகளுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது ஒன்றும் பெரிதாக அதிர்ச்சி அளிக்கும் விஷயம் இல்லை தான்.
தொடக்கம் முதலே இந்த அரசு பெருநிறுவன முதலாளிகள் என்றால் வெண்ணெயும் சாமானிய மக்கள் என்றால் சுண்ணாம்பும் பொருத்திக் கொள்வதை விவரமறிந்த அனைவரும் கவனித்திருப்பார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சாதாரண மக்கள் நெடும் வரிசையில் பல மணி நேரங்கள் காத்திருக்க சேகர் ரெட்டியின் வீட்டில் புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் அடங்கிய நூற்றுக்கணக்கான பெட்டிகளை நாடே தொலைக்காட்சி பெட்டிகளில் பார்த்தது. சேகர் ரெட்டி இப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் சிறப்பு உறுப்பினர் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக விவகாரங்களை (சொத்துக்கள், அவற்றின் வருமானங்கள் உள்ளிட்ட) கவனிக்கும் உள்ளூர் ஆலோசனை குழுவின் தலைவர் என்பது வேறு விஷயம். மறுபுறத்திலோ பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் விளைவாக சுமார் நூறு பேர் பூமியை விட்டு நீங்கி ஆண்டவரிடம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பதற வைக்கும் சோகம்.
இது மட்டுமா? தற்போது கிட்டத்தட்ட மறக்கப்பட்டு விட்ட யெஸ் வங்கி நிதி முறைகேடு, பிஎம்சி கூட்டுறவு வங்கி முறைகேடு போன்றவற்றை கையாண்ட விதம், திவாலாகிப் போன அனில் அம்பானி கம்பெனிக்கு ரஃபேல் போர் விமானங்களின் உதிரி பாக தயாரிப்பு ஒப்பந்தம் என பல இடங்களில் தன்னை பெருநிறுவனங்களின் நலனைப் பேணிக் காக்கும் அரசாக இந்த அரசு வெளிப்படையாக செயல்படுவதை பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.
இதில் யெஸ் வங்கி விஷயத்தின் சிறிய பகுதியை மட்டும் சொல்லி விட்டு மீதத்தை வாசகர்களின் சொந்த கருத்திற்கு விட்டு விடுகிறேன். 2014ம் வருடம் யெஸ் வங்கி அளித்த ஒட்டுமொத்த கடன்களின் அளவு 55000 கோடிகளாக இருந்தது. ஆனால் 2019ம் வருடம் இது 2,41,000 கோடிகள் என்ற அளவிற்கு அசுரத்தனமாக 450 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்து நின்றது. இந்த கடன்களில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக மாறி வங்கியின் பணத்தை (அப்பாவி குப்பன் சுப்பன் போட்ட டெபாசிட் பணம் என்று பொருள் கொள்ளவும்) அழித்தார்கள். இவை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் மூக்கின் கீழ் நடந்தவை. நிதியமைச்சகம் மௌனப் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது
Loan to deposit Ratio என்று ஒரு முக்கியமான காரணியை கொண்டு வங்கிகளின் நிதி சுகாதாரத்தை முடிவு செய்வார்கள். 100 ரூபாய் டெபாசிட் இருந்து 80 – 90 ரூபாய் வெளியில் கடன் அளித்திருந்தால் நல்ல வங்கி. ஆனால் இந்த யெஸ் வங்கியோ 100 ரூபாய் டெபாசிட்கள் என்றால் 160 ரூபாய்கள் கடன் அளித்திருந்தது! உத்தரவாதமாக ஊத்தி மூட வேண்டும் என்ற முன்தீர்மானத்தோடு செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால் பாருங்கள், ரிசர்வ் வங்கிக்கோ அல்லது நிதியமைச்சகத்திற்கோ இது குறித்தெல்லாம் எதுவுமே தெரியாது. நம்பி விடுங்கள், இல்லையென்றால் தயாராக வைத்திருக்கும் தேசவிரோதி ஸ்டிக்கர் ஒட்டி விடுவார்கள்.
யெஸ் வங்கியில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட பட்டியலை கீழே பாருங்கள். (Fig 1)

இதில் யார் மீதாவது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விவரம் அறிந்த யாராவது சொன்னால் மகிழ்ச்சியடைவேன். இதில் குறிப்பிட்டுள்ள ILFS என்ற ராட்சத ஊழல் குறித்து யாரும் பேசுவது கூட இல்லை. யாரோ ஒருவர் மிகவும் சரியாக, கனகச்சிதமாக சொன்னார் – ILFS என்றால் I Love Financial Scams.
யெஸ் வங்கி வள்ளலாக உருவெடுத்து வாரி வழங்கிய கடன்களில் பெரும் பகுதி வாராக் கடன்களாக மாறி வங்கியின் நிதி ஆதாரங்களையே அழித்தது என்பதை தனியாக சொல்லவும் வேண்டுமா என்ன? கீழே உள்ள படத்தை நன்கு கவனியுங்கள். 2016ல் வெறும் 749 கோடியாக இருந்த வாராக் கடன் 2020ல் 32877 கோடிகளாக பிரம்மாண்ட “வளர்ச்சி” அடைந்துள்ளது. (Fig 2)

தொட்டதற்கெல்லாம் காங்கிரஸை குறை கூறும் நியாயஸ்தர்கள் இந்த விஷயத்தில் ஒன்றுமே நடக்காதது போல கமுக்கமாக இருப்பார்கள். ரத்தம், தக்காளி சட்னி மொமெண்ட்.
சரி, இப்போது நடப்பு விஷயத்துக்கு வருவோம். நியாயமாக யோசியுங்கள். கொரோனா தொற்று பரவி விடும் என்ற அச்சத்தில் பொது முடக்கத்தை அறிவித்தது மத்திய அரசு. சரியான நடவடிக்கை தான் இது. சாலையில் நடந்து சென்றால் கூட காவல்துறையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேர்ந்த காலமாக இருந்தது. எப்படி ஐயா கடையை/தொழிற்சாலையை/நிறுவனத்தை திறந்து வியாபாரம் செய்வது? ஆனால் இப்போது கந்து வட்டிக்காரன் போல கட்ட வேண்டிய வட்டிக்கும் சேர்த்து வட்டி போட்டுள்ளோம், மரியாதையாக கட்டி விடு என்று மிரட்டுவது என்ன வகை நியாயம்?
இதற்கு ஒரு பதில் வரலாம். வங்கிகளும் பொதுமக்களின் பணத்தை கொண்டு தானே இயங்குகின்றன, அவை லாபம் சம்பாதித்தால் தானே முதலீட்டாளர்களுக்கு அதன் பலன்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்று கேட்பார்கள். அவர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டி கட்டுரையை நிறைவு செய்கிறேன். ருசி சோயா என்று ஒரு நிறுவனம். சுமார் 12000 கோடிகளுக்கும் மேலாக அது வங்கிகள் மற்றும் சப்ளையர்களிடம் கடன் வாங்கி செலுத்தவில்லை. அதனை யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வெறும் 4350 கோடிகள் மட்டுமே செலுத்தி வாங்கியது. அப்போது மீதமுள்ள தொகை என்ன ஆயிற்று என்று கேட்பவர்கள் ஐயோ பாவம், அப்பாவிகள். தெள்ளிய ஆங்கிலத்தில் ஏதோ ஒரு வார்த்தையை சொல்லி அதன் கணக்கை முடித்து விடுவார்கள். ஏதோ இந்த அளவிற்காவது வந்ததே என்று வங்கிகள் சந்தோஷம் அடைய வேண்டியது தான். கோயம்புத்தூரில் கிரைண்டர் கம்பெனி வைத்திருக்கும் சாதாரண மனிதன் வாங்கிய கடனுக்கு வட்டியும், வட்டிக்கு வட்டியும் செலுத்த வேண்டும். பதஞ்சலி நிறுவனம் (ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். பலப்பல நிறுவனங்களின் பெயர்களை சொல்ல முடியும்) 12000 கோடி கடன் உள்ள நிறுவனத்தை வெறும் 4350 கோடி கொடுத்து வாங்கிக் கொள்ளும். இதுதான் இதனால் அறியும் நீதி.
இது யாருக்கான அரசு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.













