ஆங்கிலேயர்கள் வருகையால் தான் இந்தியா என்ற தேசம் சாத்தியமானது என்ற காலனிய மனப்பான்மையுடன் பேசும் மார்க்ஸியர்களும் திராவிடர்களும் கூறுவதுண்டு. இதற்கு மாற்றாக, பல உதாரணங்களைக் கூறினாலும் அவற்றைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஏனென்றால், ஒன்றுபட்ட இந்தியா அவர்களுடைய குறிக்கோள்களுக்கு எதிரானது.
சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சு எழும்போது, ஹிந்துக்களிடமிருந்து வரும் மறுமொழி – ‘அப்படியென்றால், கிழக்கிந்திய கம்பெனி என்பது என்ன?’. மார்க்ஸியர்களின் விஷமப்பேச்சில் அதற்கு பதில் இருக்காது. கிரேக்க, ரோமானிய, அராபியர்கள் வடக்கில் இமய மலையாலும், மற்ற மூன்று திசைகளில் கடலாலும் சூழப்பட்டதை இந்தியா என்றே குறித்தனர். புவியியல் அமைப்புகளால் தெளிவாக வரையறுக்கப்பட்ட இந்தியா, அதாவது பாரதத்தை, இங்கு வாழ்ந்தவர்கள் தங்களுடைய தேசிய நாகரீகத்தின் அடையாளங்களாகக் கொண்டவை யாவை?
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் ஹர்பிலாஸ் சார்தா, ராதா குமுத் மூகர்ஜி போன்ற அறிஞர்கள் இதைப் பற்றி எழுதியுள்ளனர். இந்நாட்டின் காடுகளும், மலைகளும், நதிகளும் புண்ணியத் தலங்களாகக் கருதப்படுபவை. அவற்றிற்குத் தீர்த்த யாத்திரை செல்வது மக்களின் புனிதக் கடனாகக் கூறப்பட்டுள்ளது. மகாபாரதத்தில், வன பருவத்தில் ஒரு உப பருவமான தீர்த்த யாத்ரா பருவம் முழுவதும் வெவ்வேறு தலங்களையும் அவற்றிற்குச் சென்று தங்கி நீராடினால் பெறும் பலன்களைப் பற்றியும் கூறுகிறது.
நாட்டின் நான்கு கோடிகளிலும் உள்ள புனிதத்தலங்களுக்குச் செல்வது, செல்லும் வழியில் சந்திக்கும் மக்களுடன் உறவாடுவது மக்களை ஒன்றிணைக்கும் செயலாகக் கருதப்படுகிறது. இன்றும் வடக்கிலிருந்து இராமேஸ்வரத்திற்கும், தெற்கிலிருந்து காசி, ஹரித்வார் என்று செல்வதும் நடை முறையில் உள்ளன.
இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைப் போல் ஒரு இடத்தை மட்டும் புனிதமாகக் கொள்ளாமல், நாடு முழுதும் புனிதத்தலங்களைக் கொண்டு மக்களை இணைப்பதால் இங்கு நாடு என்பது வரையப்பட்ட எல்லைகளுக்குட்பட்டது என்ற வெற்றுத் தகவலாக இல்லாமல், மக்களின் உணர்வுடன் இணைந்ததாகும்.
சைவர்களும் வைணவர்களும் சாக்தர்களும் தங்கள் இஷ்ட தெய்வத்தை தரிசிக்க பல புண்ணியத்தலங்களுக்குச் செல்கின்றனர். வைணவர்களின் திவ்ய க்ஷேத்திரங்கள் வடக்கில் நேபாளம், உத்திராஞ்சல் மாநிலம் வரையிலும் மேற்கில் குஜராத்திலும் தெற்கில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களிலும் உள்ளன. சைவர்களின் ஜோதிர்லிங்கங்கள் வட மாநிலங்களில் அமைந்துள்ளன. சக்தி பீடங்கள் கிழக்கில் அஸாம், வங்காளத்திலிருந்து, மேற்கே குஜராத், மகாராஷ்டிரத்திலும், வடக்கே காஷ்மீர் வரையிலும், தெற்கே கன்னியாகுமரி வரையிலும் நிறைந்துள்ளன.
அத்தலங்களுக்குச் செல்லும் வைணவர்களும், சைவர்களும் சாக்தர்களும், நாட்டின் பிற பகுதியிலிருந்து வந்துள்ள, வெவ்வேறு சமூகங்களிலிருந்து வந்து பிற மொழி பேசும் மக்களைச் சந்திக்கின்றனர். இவ்வாறு எல்லோரும் கூடும் இடத்தில் புழங்கும் மொழி சமஸ்கிருதமாக இருந்து வந்துள்ளது. சமஸ்கிருதத்தை வட மொழி என்று சொல்வது அது வடக்கில் வழங்கப்படும் மொழி என்பதால் அல்ல; பல இழைகளால் பின்னப்பட்ட தேர் வடம் போல, பல மொழி பேசுபவர்களை ஒன்றிணைக்கும் மொழி என்பதால் தான்.
வைணவக் கோவில்களில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடப்படுகிறது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல; ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் உள்ள வைணவத்தலங்களிலும் திருப்பாவை பாடப்படுகிறது. சைவத் திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம் ஓதப்படுகின்றன. தமிழ் நாட்டுக் கோவில்களில் தமிழ் மொழிக்கு உரிய இடம் ஏற்கனவே உள்ளது. அர்ச்சனை மட்டுமே வடமொழியில் செய்யப்படுகிறது. அதை நிறுத்துவது அவர்களுக்குத் தமிழ் மேல் உள்ள பிரியத்தால் அல்ல. வடமொழியை ஒதுக்கி, தமிழில் அர்ச்சனை செய்வது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வருபவர்களை ஒதுக்குவதற்குச் சமம். முதலில் தமிழிலும் அர்ச்சனை என்று ஆரம்பித்து, வட மொழி தெரியாதவர்களை நியமித்து பின்னர் தமிழில் மட்டும் என்று மாறும்.
இதற்கு பதிலாக பிற மாநிலங்களில் தமிழ் ஒலிப்பதை நிறுத்த யாராவது குரல் கொடுக்கக் கூடும்.
பிரச்சினை மதம், மொழி பற்றியது அல்ல. இந்தியாவைத் துண்டாட நிற்கும் சக்திகளின் செயலாகவே இதைப் பார்க்கவேண்டும். இது ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய நச்சுச் செடி.













