“Less is more.” – Mies Van Der Rohe
வாழ்க்கையை வாழ்வதற்கு இரு விதமான அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று அத்தனைக்கும் ஆசைப்படுவது, அத்தனையையும் அடைந்து விடுவது; அனுபவிப்பது. இரண்டாவது நம் வாழ்க்கைக்குக் குறைந்தபட்சம் என்ன தேவையோ அதை மட்டும் நுகர்வது, துய்ப்பது.
முதலாவது அணுகுமுறை கொண்டாட்டமானது தான். கோலாகலமானது தான். Rich and affluent! ஆனால் இதில் சில பிரச்சினைகள் அடங்கி இருக்கின்றன. பொருள் மேல் பொருளாக வாங்கிக் குவிக்கிறோம். பொருட்கள் என்றில்லை. மனிதர்களிடமும் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. மாற்றிக்கொண்டே போகிறோம். இணைத்துக்கொண்டே போகிறோம். காதலி, மனைவி, துணைவி, இணைவி, பிணைவி என்றெல்லாம். ஒரு கட்டத்தில் எல்லாப் பெண்களும் ஒன்று தான் என்று உணர வேண்டி இருக்கிறது. சலிப்பு தட்டி விடுகிறது. எல்லா உடைகளும் ஒன்று தான். அங்கங்கே superficial differences மட்டுமே! இன்னும் சொல்லப் போனால் we are all naked under our clothes!
எல்லாப் பெண்களுமே ஒன்று தான். ஓஷோவின் இந்த ஜோக் அழகானது.
‘மிக் ஜாகர்’ -உடன் ஓர் இரவைக் கழிப்பது பெக்கியின் கனவாக இருந்தது. ஒவ்வொரு முறை அவள் ஓர் ஆணுடன் இரவைக் கழிக்கும் போதும் மறுநாள் காலை அவளது தோழி அவளை இவ்வாறு கேட்பது வழக்கம்.
“என்னடி, எப்படி இருந்தது உன் அனுபவம்?”
இதற்கு ஒவ்வொரு முறையும் தவறாமல் இந்த பதில் வந்து கொண்டிருந்தது மிஸ்.பெக்கியிடம் இருந்து.
“பரவாயில்லை, என்னதான் இருந்தாலும் மிக் ஜாகர் மாதிரி வருமா”?
ஒருநாள் நிஜமாகவே மிக் ஜாகருடன் ஓர் இரவைக் கழிக்கும் அந்த அரிய வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தே விட்டது.
மறுநாள் தோழி ஆர்வத்துடன், ‘என்னடி, எப்படிப் போச்சு?’ என்றாள்.
பெக்கி, “ம்ம்ம், பரவாயில்லை, என்னதான் இருந்தாலும் மிக் ஜாகர் மாதிரி வருமா”?” என்று பதிலிறுத்தாள்.
(எதுவுமே உங்களைத் திருப்திப்படுத்தப் போவது இல்லை. –ஓஷோ தம்மபதம் vol -7)
சிறியதொரு கருப்பு வெள்ளை டிவி நம்மிடம் இருந்தது. இப்போது பாதி சுவரை அடைத்துக்கொண்டு 75 இன்ச் ஸ்மார்ட் டிவி இருக்கிறது. எதுவுமே பெரிதாக மாறி விடவில்லை. உண்மையில் கருப்பு வெள்ளை டிவி இருந்தபோது வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது போலத் தோன்றுகிறது.
நமது இந்தப் பேராசை நம்மை மட்டுமல்ல அடுத்தவனையும் பாதிக்கிறது. ஒருவரே மூன்று பெண்களைக் கட்டிக் கொண்டால் மற்ற இரு ஆண்கள் பெண் கிடைக்காமல் தவிக்க வேண்டி நேரலாம். அவசர காலங்களில் இப்படி நிகழ்கிறது. ஜெயலலிதா இறந்து விட்டார், கருணாநிதி இறந்து விட்டார் அல்லது பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு விட்டது, நாளை முதல் லாக்-டவுன், ஓடு கடைக்கு உடனே. இருக்கிற பிஸ்கட் பாக்கெட்டை எல்லாம் நீயே வாங்கு, பால் எட்டு பாக்கெட் வாங்கி விடு. கடைக்காரர் மறுக்க மாட்டார். பத்து பேருக்கு பத்து பாக்கெட் கொடுத்தால் என்ன, ஒருவருக்கே பத்தும் கொடுத்தால் என்ன? எல்லாம் அவருக்கு ஒன்று தான். ஆனால் அந்த பிஸ்கெட்டும், பாலும் நிஜமாகவே ஒரு குழந்தைக்குத் தேவைப்படுகிறது, அவர்கள் கடைக்கு வருவதற்கு முன்னர் எல்லாம் முடிந்து விட்டது. லாக்-டவுனின் போது வெளிநாடுகளில் மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் டாய்லெட் பேப்பர்களை அளவுக்கு அதிகமாக வாங்கிக் குவித்த அவலம் அரங்கேறியது நினைவிருக்கலாம்.
‘இட’ விஷயத்திலும் இப்படித்தான் நடக்கிறது. எத்தனை காலி மனைகளை அப்படியே சும்மா வாங்கிப்போட்டு புதர் மண்ட விடுகிறோம்? அதில் யாரோ ஒரு ‘தேவையுள்ள’ மனிதர் வீடு கட்டி இருக்கலாம், கடை வைத்து இருக்கலாம். உலகத்தில் தான் காசை வீசினால், எது வேண்டுமானாலும், எத்தனை வேண்டுமானாலும் கிடைத்து விடுகிறதே! ‘பணம்’ மட்டுமே ஒருவரது buying capacity யை தீர்மானிப்பது கொஞ்சம் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம். நம்மிடம் உடம்பில் அதிக வலு இருக்கிறது என்று யாரை வேண்டுமானால் போய் அடித்து விட முடியுமா? அது மாதிரி தான் இதுவும். ஒருவரது buying capacity அவரது தேவை, சமூகப் பொறுப்புணர்வு, அவரது பொறுப்புகள், அவரைச் சார்ந்தோர் எண்ணிக்கை, அவரது பணி, சுற்றுச் சூழல் பங்களிப்பு போன்றவைகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். ready cash கொடுத்தாலும் ‘சாரி சார், நீங்கள் இந்த மாதம் இந்த பிரிட்ஜை வாங்க முடியாது, உங்க buying score கம்மியா இருக்கு’ என்று நிராகரிக்கப்படும் நிலை வர வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், உயர் அதிகாரிகள் தங்கும் மாளிகைகள், அரசியல் தலைவர்களின் பங்களாக்கள் என்று எத்தனை இடம் தேவைக்கு அதிகமாக வீணாகிறது என்று எண்ணிப் பாருங்கள். எதற்கு அத்தனை பெரிய பரப்பளவில் ஆளுநர் மாளிகை? ஆளுநரே ஓர் ஆட்டு தாடி தான். ஆட்டுதாடிக்கு எதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கரில் வசிப்பிடம்?
எதற்கு முதலமைச்சருக்கு அத்தனை கார்கள் முன்னும் பின்னும்? எதற்கு வெட்டியாக அத்தனை போலீஸ் வரிசையில்? அலுவலகங்களில் எதற்கு அத்தனை காகிதங்கள்? ஸ்டேஷனரி? ஒவ்வொரு முறை கையெழுத்துக்கும் ஒவ்வொரு பேனா?
பெரிய வீடாக இருக்கட்டும் என்று வாங்கிப்போட்டு வீட்டில் எத்தனை இடங்களை உபயோகிக்காமல் சும்மா வைத்திருக்கிறோம்? சமீபத்தில் ஊருக்குச் சென்ற போது சென்னை வீட்டின் ஓர் அறையின் சாவி மறந்து விட்டது. அந்த அறை பூட்டியே இருந்தது. ‘போச்சு, ஒரே ஒரு அறையை வைத்துக்கொண்டு கஷ்டப்படப் போகிறோம்’ என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியமாக அந்த அறை தேவைப்படவே இல்லை. அந்த அறை இல்லாமல் மூன்று பேர் 1bhk வில் தாராளமாக இருக்க முடிந்தது. மூன்று பேருக்கு எதற்கு 2000 சதுர அடியில் வீடு? மூவர் இருக்கும் வீட்டில் எதற்கு ஆறு செல்போன்? எதற்கு நான்கு டிவி? எதற்கு நான்காயிரம் செட்டு உடைகள்?
பைப்புகளில் நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை ‘நல்ல தண்ணீர்’ விடப்படும் வீடுகளில் பார்த்தால் ஒரு ஏழெட்டு டிரம்-களை வாங்கிப்போட்டு தண்ணீர் பிடித்து வைப்பார்கள். 2 அல்லது 3 டிரம்-களே போதும் என்று தெரிந்த போதும். உபயோகிக்காத தண்ணீரில் புழு பாசி படிந்து கீழே சிந்துவது தான் நடக்கும். நான்கு பேருக்கு இத்தனை சாதம் போதும் என்று தெரியும். இருந்தாலும் ஒண்ணரை டம்ளர் கூட வைப்போம். குப்பையில் வீசுவோம். வள்ளுவர் ரேஞ்சுக்கு ஊசியை வைத்துக் கீழே விழுந்த பருக்கைகளைப் பொறுக்கி எடுத்து நீரில் அலசி சாப்பிட வேண்டியது இல்லை. குறைந்த பட்சம் வீணாக்காமல் இருக்கலாம்.
ரசம், பொரியல், வத்தல் குழம்பு, சாம்பார், அப்பளம் என்று ஐந்தும் வேண்டாம், ஏதோ இரண்டு மட்டும் போதும் என்று முடிவெடுப்பது. எல்லாவற்றையும் ஒரே நாள் ஒரேயடியாகச் செய்தால் wastage அதிகம் இருக்கும். சில சமயம் யாரும் சாப்பிட மாட்டார்கள் என்று தெரிந்தே சில அயிட்டங்களை சமைத்து வைப்போம். இட்லிக்கு ஆர்வக் கோளாறில் ஐந்து வகை சட்னிகளை கலர் கலராக செய்து வைப்போம்.
simple living என்பது சிக்கனம் அல்ல, கஞ்சத்தனம் அல்ல. வறுமையும் அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. போதும், இருவருக்கு 600 சதுர அடியில் வீடு போதும். ஒண்ணரை டம்ளர் அரிசி வடித்தால் போதும். ஒரு வேளைக்கு கால் கிலோ தக்காளி, கால் கிலோ அவரைக்காய் போதும், ஏற்கனவே இருக்கும் நான்கு செட் உடைகளே போதும், இரண்டு தலையணை போதும், இரண்டு பெட்ஷீட் போதும், பழைய செல்போனையே சர்வீஸ் செய்து பயன்படுத்தினால் போதும் என்று முடிவெடுப்பது.
கலையில் ‘minimalism’ என்பது முழு மாட்டையும் வரையாமல் அதன் கொம்புகளை மட்டும் வரைந்து காட்டுவது. non essential களை விட்டு விடுவது. வாழ்க்கையிலும் நிறைய non essentials இருக்கின்றன. சினிமாவில் சொல்வது போல பசி அடங்கியதும் சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் அடுத்தவருடையது. கொஞ்சம் கம்யூனிச சித்தாந்தம் போல் தோன்றினாலும் இது தனிமனித கட்டுப்பாட்டுடன் சம்பந்தப்பட்டது. இது ஒரு தவ வாழ்க்கைக்கு நிகரானது. Live simply and happily!













