மகள், மருமகள் பிரசவத்திற்காக அமெரிக்கா செல்லும் பெற்றோர்கள் முதலில் விதந்தோந்துவது அல்லது புலம்புவது அவர்கள் பிள்ளைகள், புறநகரில் வாங்கியுள்ள வீடு, அதன் சுற்றம் பற்றியதாக இருக்கும். கண்ணுக்கும் அழகாக இருக்கும் அந்தச் சூழல், வசதி, பொருளாதாரம் ஆகிய கோணங்களில் எப்படி என்று அவர்களுக்குத் தெரியாது.

Photo by Eric Brehm on Unsplash
அப்படிப்பட்ட இடங்களில், அலுவலகத்திற்குப் பக்கத்தில் வீடு அல்லது தற்காலிக இருப்பிடம், பக்கத்திலேயே கடைகள், உணவு விடுதிகள் ஆகியவை சாத்தியமில்லை. நடந்து செல்லும் தூரத்தில் அடிப்படைத் தேவைகளை நிறைவேறினால் அதைப் போல வசதி ஏதுமில்லை. அந்த விதத்தில் லண்டன் உட்பட பழமையான நகரங்கள் வசதியானவை.
பழைய சென்னையும் வசதியானதுதான். அடையார் போன்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு பக்கத்திலேயே அலுவலகம் இருப்பது ஏறக்குறைய சொர்க்கம். ஆனால் அவை பார்க்க அழகாக இருப்பதில்லை.

அந்த விதத்தில், ஐடியால் பரவிவரும் மிகப் புதிய சிறு நகர்களாக திட்டமிடப்பட்ட சிறுசேரி, பெரும்பாக்கம் போன்ற பகுதிகளும், பெங்களூரில் வைட்ஃபீல்ட் போன்ற பகுதிகளில் வளர்ந்துள்ள 24 மணி நேர காவலுடன் பாதுகாக்கப்பட்ட சேரிகளும் (Gated Communities) அழகானவை, ஆனால் வசதிக்குறைவானவை. என்ன வேண்டுமென்றாலும், வெளியில் வரவேண்டும்; அதுவும் பிளேடு வாங்க, ஒரு டீ குடிக்க போன்ற அல்ப விஷயங்களுக்காகக் கூட குறைந்தபட்சம் 10 நிமிட நடை – 800 மீட்டரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில். மாலை ஏழு மணிக்கு மேல், மனிதர்கள் யாரும் கண்ணில் பட மாட்டார்கள். வழி தவறினால், கேட்பதற்கு ஆள் நடமாட்டம் இருக்காது.
அழகு, வசதி போன்றவற்றை ஒரு புறம் வைத்துவிட்டு, பொருளாதார ரீதியில் எவை மேலானவை என்று பார்ப்போம்.
இதைப் பற்றி சார்ல்ஸ் மாரோன் என்ற நிலப் பயன்பாட்டு நிபுணர் கூறுவதைப் பாருங்கள்.
பெரிதாகத் திட்டமிட்டு உருவாக்கப்படும் புறநகர்ப்பகுதிகள், கால மாற்றத்திற்கேற்ப வளைந்து கொடுத்து பொருளாதர ரீதியில் தாக்குப்பிடிப்பதில்லை. உதாரணத்திற்கு, அத்தகைய புறநகர்ப்பகுதிகளில், சம பரப்பளவு உள்ள இரு இடங்களில் – ஒன்றில் பல சிறு கடைகளிலிருந்து வரும் மொத்த வரி, மற்றோன்றில் வாகனம் நிறுத்த இடம் விட்டு நடத்தப்படும் ஒரே ஒரு பெரிய கடையிலிருந்து வரும் வரியை விட மிக அதிகம். அதே போல, உள்ளூர் அரசின் நிர்வாகத்தைப் பொறுத்தவரை, திட்டமிடப்படாத சில நகரங்களில் ஏழைகள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகள், திட்டமிட்டு கட்டப்பட்ட பணக்காரப் பகுதிகளைவிட பொருளாதார ரீதியில் ஆரோக்கியமாக உள்ளன. இன்னும் சில நகரங்களில், ஏழ்மைப் பகுதிகளின் வரியே பணக்காரப் பகுதிகளை நிர்வகிக்க உதவுகிறது.
பழமையான நகரங்களில், பணக்காரர்களைச் சுற்றி ஏழைகளின் குடியிருப்புகள் இருக்கும். வீட்டு வேலை, பேப்பர், பால் வினியோகம், சிறு வணிக நிறுவனங்கள் என்று ஒருவருக்கொருவர் சார்ந்து வாழும் வாழ்க்கை. சிறுசேரி போன்ற பகுதிகள் அதற்கு எதிரானவை. ஏதாவது காரணங்களுக்காக, அந்த இடங்களில் வாழ்வது கட்டுப்படியாகவிட்டால், அவ்விடங்களை வேறு விதத்தில் பயன்படுத்த முடியாது. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன், தி.நகர், அடையாறு போன்ற பகுதிகளில் வசித்தவர்கள் அங்கிருந்து வெளியேற சில காரணங்கள் இருந்திருக்கும். அங்கு பெரிய வீடுகள் இருந்த மனைகளில் கடைகள் வந்தன. பெரிய கடைகள் லாபகரமாக இல்லாதபோது, பல சிறு கடைகளைக் கொண்ட வணிக வளாகம் வரக்கூடும். வளைந்து கொடுக்கக்கூடிய இத்தகைய அமைப்புகள், பல நூற்றாண்டுகளுக்கு மக்களின் பயன்பாட்டில் இருக்கக் கூடும்.
மாறாக, மிக நன்றாக திட்டமிடப்பட்ட குடியிருப்புகளோ, புற நகர்ப்பகுதிகளோ, கால மாற்றத்தில் ஏற்படும் பொருளாதார அலைகளைத் தாக்குப்பிடிக்க முடியாது. இதுவரை அதிக மக்கள் அடர்த்தி கொண்ட இந்தியாவில் இந்த நிலமை வரவில்லை. ஆனால் சிறு நகரங்களாக நன்கு திட்டமிடப்பட்ட சிறுசேரி, வைட்ஃபீல்ட் நகரங்கள் பொருளாதார நெருக்கடியில் என்னவாகும்? காவலர்கள், சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிப்பு, பதினேழு மாடிகளுக்குச் செல்ல குறைந்தபட்சம் நான்கு லிஃப்ட்கள், டென்னிஸ் கோர்ட், பொது இடங்கள், உள் சாலைகளின் பராமரிப்பு ஆகியவற்றிற்கான செலவு அதிகரிக்கும் போது, அதற்கேற்றபடி அங்கு வசிப்பவர்களின் வருமானம் அதிகரிக்குமா? அதிகரிக்காவிட்டால், அங்கிருப்பவர்கள் என்ன செய்வார்கள்? இருபது, முப்பது வருடங்களில் அங்கு வசிப்பவர்களின் வயது ஏற, அவர்களுடைய மாறும் தேவைகளுக்கு ஏற்ப அந்த இடங்கள் உள்ளனவா?
ஐம்பது வருடங்களுக்கு முன் திட்டமிடப்பட்ட அமெரிக்க நகரங்களின் திட்டம் சரியில்லை என்று இப்போது பேசத் தொடங்கியுள்ளார்கள். நம் புதிய நகரங்களைப் பற்றி பேச இன்னும் சில பத்தாண்டுகள் பிடிக்கக்கூடும்.













