போராட்டங்கள்! போராட்டங்கள்! போராட்டங்கள்!
யாரை எதிர்த்து இந்தப் போராட்டங்கள்?
அவர்கள் எதிர்ப்பது மோதியையா? பாஜகவையா? இல்லை, இல்லவே இல்லை. அவர்கள் எதிர்ப்பது என்னையும், உங்களையும், நம் போன்ற சாதாரண மக்களையே.
மண்டிகள் என்ற பெயரில் ஏழை, நடுத்தர விவசாயிகளை சுரண்டி கொழுத்த தரகு கும்பலின் பல்லாண்டு சுரண்டலை முடிவுக்கு கொண்டு வருகிறது விவசாய சீர்திருத்த சட்டங்கள். அதனை எதிர்ப்பதன் மூலம் மோதியைத் தானே எதிர்க்கிறார்கள் என்று கேட்கலாம் நீங்கள். மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ஆனால் உண்மைகள் வேறானவை. இங்கே காலம் காலமாக நடைமுறை நிலை (status quo) நிலவி வந்தது. விவசாயம் என்று மட்டுமில்லை, அனைத்து துறைகளிலும் ஒருவிதமான வேரூன்றிய சமநிலைத்தன்மை (established equilibrium) நிலவி வந்தது.
பாகிஸ்தானில் உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் இந்திய கரன்சி தாள்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை தேசிய புலனாய்வு முகமை (NIA) 2013ம் வருடத்தில் பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்திருந்தது. எத்தனை ஆயிரம் (லட்சம்?) கோடிகள் புழக்கத்தில் வந்தனவோ சர்வேஸ்வரனுக்கு மட்டுமே வெளிச்சம். உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் அவற்றிற்கு சமாதி கட்டினார் மோதி. காங்கிரஸின் ராகுல் காந்தி, திமுகவின் ஸ்டாலின் முதற்கொண்டு SDPI உள்ளிட்ட உதிரிகள் வரை இதனை கடுமையாக எதிர்த்ததை நினைவுகூர்தல் நலம்.
விளைபொருட்களை தரகு வியாபாரிகள் வாங்கி பதுக்கி வைத்து பண்டிகைகள் போன்ற தேவைப்படும் காலங்களில் கண்டபடி விலையை உயர்த்தி வைத்து கொழுத்த லாபம் சம்பாதித்து வந்தார்கள். ஜிஎஸ்டி மூலம் அதை முடிவுக்குக் கொண்டு வந்தார் மோதி. மிகவும் இறுக்கமான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி நடைமுறையிலேயே போலி பில்கள் மூலம் இத்தனை ஆயிரம் கோடிகள், அத்தனை ஆயிரம் கோடிகள் மோசடி என்று அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆன்லைன் அமைப்புகள் உள்ளதால் இந்த மோசடிகள் அம்பலத்திற்கு வருகின்றன. இது எதுவுமே இல்லாத பழைய முறையில் எவ்வளவு ஆயிரக்கணக்கான கோடிகள் அரசு பணம் விழுங்கப்பட்டு ஏப்பம் விடப்பட்டதோ, பெருமாளுக்கு மட்டுமே வெளிச்சம்.
மருத்துவப் படிப்பு என்பது ஒருவகையில் பண்டைய வரிவசூல் உரிமை போல இருந்த காலம் இருந்தது. தலைமுறை தலைமுறைகளாக அந்த உரிமம் பெற்றிருந்தவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் உள்ளே கால் வைக்க முடியும். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பெருந்தனக்கார குடும்பங்களில் பிறந்திருக்க வேண்டும் என்பதே பொதுவான விதி எண் 1. உறுதியாக நின்று உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்தினார் மோதி. விளைவு? பாமரன் வீட்டுக் குழந்தையும் தனது திறமை, உழைப்பின் மூலம் படித்து தலைமுறைகளின் கனவை நனவாக்கிக் கொண்டது. வருடாவருடம் ஆயிரக்கணக்கான கோடிகளை கல்லா கட்டிய வியாரிகள் அவ்வளவு எளிதில் விட்டு விடுவார்களா? பல தற்கொலைகள் நிகழ்ந்தன, ஊடகங்கள் என்ற பெயரில் இயங்கும் ஓநாய்கள் ஓலமிட்டன. நாடகங்களையும் இயக்குபவர்களையும் நன்கறிந்த பிரதமர் அசையாமல் நின்றார். சாதாரண மனிதன் வீட்டுக் குழந்தையும் மருத்துவராகும் கனவு வசப்பட்டது.
மருந்துகளிலும் இதையேதான் செய்தார். ஜன் ஔஷதி எனப்படும் மக்கள் மருந்தகங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு கிடைக்கும் மருந்துகளை சில நூறுகளில் கிடைக்கச் செய்தார். இதய அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஸ்டெண்ட்களில் நடந்து கொண்டிருந்த உலகக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வந்தார். கந்து வட்டிக்கு கடன் வாங்கி நாசமாகிப் போன கணக்கற்ற சிறு வியாபாரிகளுக்கு முத்ரா திட்டம் மூலம் அபய முத்திரை அளித்துக் காத்தார்.
இவ்வளவும் அவர் யாருக்காக செய்தார்? உங்களுக்காக, எனக்காக, நம் போன்ற பல கோடி சாதாரண மக்களுக்காக.
தலைமுறைகளாக வஞ்சிக்கப்பட்ட நாம் இனியும் தொடர்ந்து சுரண்டப்பட்டு அழியக்கூடாது என்பதற்காக. தாமதமாக இருந்தாலும் நாமும் விழித்துக் கொண்டோம். அவர் பின்னர் ஒன்று திரண்டு அணிவகுத்து நிற்கிறோம்.
இவரது இந்த தொடர் நடவடிக்கைகளால் ஒவ்வொரு துறையிலும் மக்களை சுரண்டி தின்று கொழுத்துக் கொண்டு எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த இடைத்தரகர்கள் கும்பல்கள் கதறி அழுதன. அவர்கள் பிழைப்பில் நிரந்தரமாக மண் விழுந்தது. அவ்வளவு எளிதில் விடுவார்களா? அவர் மீதான கோபம் ஆத்திரமாக மாறி வன்மமாக மாறியுள்ளது. நாட்டின் சாதாரண மனிதனுக்காக உழைக்கும் அவர் மீதான கோபம் சாமானிய மனிதன் மீதான கோபமாக உருமாறி உள்ளது.
சாமானியன் வீட்டுப் பிள்ளை மருத்துவ கல்லூரியில் சேருவதா? சாமானியன் சில நூறு ரூபாய் மட்டும் செலவு பண்ணி மருந்து சாப்பிட்டு பன்னாட்டு மருந்து கம்பெனிகள் பாழாய் போவதா? கந்து வட்டிக்கு வாங்காமல் வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்வதா? கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்காமல் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிப்பதா? பல லட்சம் செலவாகும் இடத்தில் சில பத்தாயிரம் செலவு செய்து இதய ஆபரேஷன் செய்து கொள்வதா? விவசாயி விளைச்சலை மண்டியில் கொண்டு வந்து கொட்டி விட்டு தரும் பணத்தை வாங்கிக்கொண்டு செல்லாமல் நேரடியாக விற்று லாபம் சம்பாதிப்பதா?
எவ்வளவு நபர்களின் பிழைப்பு கெடுகிறது, எவ்வளவு சுரண்டல்கள் அழிகின்றன, எவ்வளவு கோட்டைகள் மண்ணோடு மண்ணாய் சரிகின்றன: அனைவரும் ஒன்று திரள்கிறார்கள். அவரால் வீழ்த்தப்பட்ட அரசியல் எச்சங்கள் அவர்களின் பின்னர் அணிவகுக்கின்றன. ஊடக ஓநாய்கள் சேர்ந்து கொள்கின்றன. போர் முரசு கொட்டப்படுகின்றது.
எச்சரிக்கை:
அவரைத் தாக்கவில்லை – உங்களை, என்னை, நம்மை தாக்குகிறார்கள். அவரை ஏளனப்படுத்தவில்லை – உங்களை, என்னை, நம்மை ஏளனப்படுத்துகிறார்கள். அவரை கேலி செய்யவில்லை – உங்களை, என்னை, நம்மை கேலி செய்கிறார்கள்.













