சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) உடல்நலக்குறைவால் காலமானார்!
அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர்பிரிந்தது!
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவருடைய தங்கை 1923-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து புற்றுநோய் சிகிச்சைக்கு என தனியாக ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என முத்துலட்சுமி ரெட்டி முடிவு செய்தார். அதற்கான முயற்சியில் தீவிரமாகவும் இறங்கினார். ஆனால், புற்றுநோய்க்கு எதற்கு மருத்துவமனை, புற்றுநோய் வந்தால்தான் உயிரிழந்து விடுகிறார்களே என அப்போதைய அரசு உள்பட பலரும் மருத்துவமனை தொடங்க ஆர்வம் காட்டவில்லை.பலகட்ட முயற்சிக்குப் பின், இந்திய பெண்கள் சங்கத்திடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் நிதி பெற்று, அடையாறு, காந்தி நகர், கெனால் பேங்க் சாலையில், 12 படுக்கைகள் கொண்ட, அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையை தொடங்கினார். 1952ம் ஆண்டு, அக்டோபர், 10ம் தேதி, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு 1954ம் ஆண்டு, ஜூன் 18ம் தேதி முதல் இம்மருத்துவமனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோரின் விடாமுயற்சி, அயராத உழைப்பு, செல்வந்தர்கள் அளித்து வரும் நன்கொடை ஆகியவற்றால், உள்கட்டமைப்பு, நவீன சிகிச்சை வசதி என நாளுக்கு நாள் இம்மருத்துவ மனை வளர்ச்சி பெற்றது.
1982ம் ஆண்டு அடையாறு, சர்தார் படேல் சாலையில் தொடங்கப்பட்ட, கிளை மருத்துவமனை, 2009ம் ஆண்டு முதல், 44 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும், குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, 450 படுக்கை வசதியுடன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இன்று பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது.
ஆனால் இந்த எழுபத்து நாலு ஆண்டுகளில் பல வியக்கத்தக்க முன்னேற்றங்கள், மாறுதல்கள் ஆகியன புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ளன.
முதன் முதலில் தென் கிழக்கு ஆசியாவில் மட்டுமல்ல ஆஸ்திரேலியா,ஜப்பானுக்கு முன்னேயே 1956ம் ஆண்டு Cobalt60 tele therapy unit இங்கு தான் செயல்படத்துவங்கியது.
குணப்படுத்தவே முடியாது என்ற சூழலில் இருந்து புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலைக்கு இன்றைய மருத்துவம் வளர்ந்துள்ளது. இவ்வளவு ஏன்? புற்றுநோயைத் தடுக்கவும் முடியும். இந்த உண்மை எல்லாம் உரக்கச் சொன்னவரிவர்
சென்னை மயிலாப்பூரில், 1927ல், பிறந்த சாந்தா, 1949ல், “மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்’ல், மருத்துவ பட்டப்படிப்பை முடித்தார். இவர் – இயற்பியல் துறையில் நோபல் பரிசினை வென்ற சர். சி.வி. ராமானின் பேத்தியும், நோபல் பரிசினை வென்ற வானவியல் விஞ்ஞானி டாக்டர் எஸ். சந்திரசேகரின் தந்தை வழி மருமகளும் ஆவார்.
ஏற்கனவே பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றுள் பத்மஸ்ரீ, ஆசிய நோபல் பரிசு என்று புகழ்பெற்ற விருதான “ராமன் மகசேசே’ மற்றும் அவ்வையார் விருதுகள் முக்கியமானவைகளாகும். எண்பத்தெட்டு வயதாகியும் இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவந்தார்.
பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு அடையாறில் செயல்பட்டுவரும் புற்றுநோய் மருத்துவமனையில் தன்னை இணைத்துக்கொண்டு கடந்த அறுபது ஆண்டுகளாக தான்வேறு புற்றுநோய் மருத்துவமனை வேறு என்று பிரித்துப்பார்க்கமுடியாத அளவிற்கு ஒன்றிப்போயிருந்தவர்.இந்த ஆஸ்பத்திரியில் 40% படுக்கைகள் மட்டுமே கட்டண சேவையாக உள்ளன.மீதமுள்ள 60% படுக்கைகள் ஏழை எளிய மக்களுக்காக இலவசமாகவே உள்ளன.அங்கேயே தங்கும் வசதி,உணவு எல்லாம் அளித்து சிறந்த சிகிச்சையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நன்கொடை கொடுக்கவேண்டும் என்று நமது நாட்டினர் மட்டுமல்ல உலகில் யார் ஒருவர் எண்ணினாலும் முதலில் நினைவிற்கு வருவது இந்த மருத்துவமனைதான் அதற்கு காரணம் டாக்டர் சாந்தாதான். புற்றுநோய் மருந்துகளின் விலை கட்டுப்படியாகாத நிலைக்கு போனபோது சம்பந்தபட்ட மத்திய அமைச்சரை இங்குள்ள குழந்தைகள் வார்டுக்கு வரவழைத்து நிலமையின் கொடுமையை உணர வைத்தவர் இதன் காரணமாக இந்தியா முழுவதும் புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு பெற்றுத் தந்தவர்.
உதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லாத காலகட்டத்தில் இவரே மருத்துவராகவும் இவரே நர்சாகவும் இருந்து செயல்பட்டவர்.இரவு 11 மணி வரை அறுவை சிகிச்சை செய்துவிட்டு அவர்களை கவனித்துக்கொள்வதற்காக குடிசையிலேயே தங்கியவர்.இன்று பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் இந்த மருத்துவ மனையின் சேவைகளைப் பற்றி இந்தியா முழுக்க பேச வைத்ததில் இவரது பங்கு மிக அதிகம்.
நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்













