25.02.2021ந் தேதி கோவையில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய பாரத பிரதமர் , தி.மு.க. மீன்டும் ஆட்சிக்கு வந்தால், சட்ட விரோதிகள் தலைதூக்குவார்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசினார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், 2002-ம் ஆண்டில் குஜராத்தில் மோடி ஆட்சி செய்த போது, நிகழ்ந்த படுகொலைகளை யாரும் மறந்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். நேரடியாக கோத்ரா கலவரம் என குறிப்பிடாமல், படுகொலைகள் என ஒரு மாயையை ஏற்படுத்தும் விதமாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தி.மு.க.வை குறை சொல்ல பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை என்கிறார் ஸ்டாலின். ஒரு குறுநில மன்னன் போல் பேசுகிறார். 2019 பாராளுமன்ற தேர்தலின் போது, மோடியே திரும்பி போ என கோஷமிட்டவர். இன்று உரிமையில்லை என்கிறார். தமிழகம் என்ன கருணாநிதி குடும்பத்திற்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டதா அல்லது ஆங்கிலேயர்களிடமிருந்து தனி சுயராஸ்யம் அடைந்தார்களா என தெரியவில்லை. தமிழகத்தை சுடுகாடாக்கியவர்கள் இன்று உத்தமர் போல் பேசுகிறார்கள். 1967 லிருந்து தமிழகத்தை ஆண்ட தி.மு.க.வின் ஆட்சியல் நடந்த அராஜகங்கள், கலவரங்கள் பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்டாலின் தள்ளியுள்ளார்
தி.மு.க.வினர் வன்முறையில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். 1958-ல் நேரு தமிழகத்திற்கு வருகை தந்த போது, தமிழர்களை இழிவுப்படுத்தி விட்டார் என்ற பொய்யான தகவலை பரப்பி, கருப்பு கொடி ஆர்பாட்டம் என்ற பெயரில் தி.மு.க.வினர் நடத்திய வெறியாட்டம் மறக்க இயலாதது. சென்னையில் பல சாலைகளில் தி.மு.க.வினர் கற்களையும், சோடா பாட்டல்களையும் வீசினார்கள். வட சென்னைியல் வசித்த மார்வாடிகளின் கடைகள் சூறையாடப்பட்டன. புஹாரி ஹோட்டல், முரளீஸ் கபே போன்ற உணவகங்கள் மற்றும் அரசாங்க பஸ்களும் தாக்குதலுக்கு உள்ளாயின. மவுண்ட் ரோடு, சிந்தாரிப் பேட்டை போன்ற பகுதிகளில் பஸ்களுக்கு தீ வைத்தார்கள். இந்த வன்முறை தி.மு.க.வினாரல் நடத்தப்பட்டது என்பதற்கு, நான் வெளியில் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் நடந்திருக்காது என அண்ணாதுரையே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார்.
எம்.ஜி.ஆர் மற்றும் கல்யாணசுந்தரம் மீது தாக்குதல்கள் – கருணாநிதி அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தி, ஆளுநரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம், போன்றவர்கள் மீது தி.மு.க.வினர் காட்டு மிரண்டித் தனமாக தாக்கியதை மறந்து விட்டார்கள். திரு கருணாநிதி பொது பணித் துறை அமைச்சராக இருந்த போது, சென்னை மருத்துவ கல்லூரி ஹஸ்டலில், போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய வெறியாட்டத்தை இன்னும் பலரும் மறக்கவில்லை. இது தி.மு..கவின் தூண்டுதலால் நடந்த தாக்குதல்.
விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டம் – 1962 ஜீலை மாதம் விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டம் நடத்திய தி.மு.க.வினரின் அராஜகம் எவ்வாறு இருந்தது என்பதற்கு, தற்போது தி.முக.வின் கூட்டாளியாக இருக்கும் கம்யூனிஸ்ட் பத்திரிக்கை ஜனசக்தியில் வந்த செய்தி, கலவரக்கார்களின் கல்வீச்சால் பொது மக்கள் சுமார் 400 பேரும், 75 போலீசாரும் காயமடைந்தார்கள். வடசென்னை நாராயண முதலித் தெருவிலிருந்த கல்யாணப் பந்தலுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தார்கள். பந்தலிருந்த ஸ்கூட்டரைத் தூக்கிப் போட்டு நாசமாக்கினார்கள். வடசென்னைப் பகுதியிலுள்ள செலக்ட்டாக்கீஸ் என்ற திரைப்படக்கொட்டகையில் புகுந்தும் கலாட்டா செய்தனர், கற்களை வீசி மக்களுக்கு துன்பத்தை கொடுத்தார்கள். ( 20.7.1960 ஜனசக்தி)
இந்தி எதிர்ப்பு போராட்டம் – இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில், தி.மு.க.வின் அராஜக புத்தி வெளிப்படுத்தியது. ஒருங்கிணைந்த தமிழ்நாடு இந்தி எதிர்ப்பு மாணவர் அமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, தளபதிகளாக எல்.கணேசன், கா.காளிமுத்து, பெ.சீனிவாசன், நாவளவன், துரைமுருகன், எஸ்.டி.சோமசுந்தரம், ரகுமான்கான், ராஜா முகமது போன்றவர்களின் தூண்டுதலாலும், தி.மு.க.வின் உள்குத்தின் காரணமாகவும், ஐம்பது நாள் போராட்டத்தில் ஐநூறு பிணங்கள் தெருவில் விழுந்தன. இதுவே தி.முக.வின் அராஜகத்திற்கு துவக்க புள்ளியாகும். இன்று தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது.
.கீழ் வெண்மனி – விவசாய தொழிலாளர்கள் கூலி உயர்வுக்கு போராடிய, இருஞ்சூர் சின்னப் பிள்ளை, திருவாரூர் ராமச்சந்திரன், பக்கிரிசாமி உள்ளிட்டவர்கள் படுகொலை சம்பவங்கள் நடந்த பின்னரும், அரசின் அலட்சியத்தின் காரணமாக 1968 டிசம்பர் மாதம் இறுதியில் 25 பெண்கள், 14 குழந்தைகள் உள்ளிட்ட 44 பேர்களை உயிருடன் ஒரு குடிசைக்குள் பூட்டி எரித்த சம்பவம் அராஜகம் என்று கூறுவதை தவிர வேறு வார்த்தையில்லை. சம்பவம் நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக விவசாயிகள் சார்பாக அரசுக்கு கடிதம் எழுதிய பின்னரும் பாதுகாக்காமல், ரவுடிகளுக்கு துணை போன அரசு தி.மு.க. அரசு என்பதை மறந்து விடக் கூடாது. 44 பேர்களை உயிருடன் கொழுத்தியவர்களில் ஒருவர் கூட தண்டனைக்கு உள்ளாகவில்லை.
கிருபாணந்த வாரியார் மீது தாக்குதல் – அண்ணாதுரை மரணமடைந்த போது, ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவுக்கே போனாலும், டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும் என நெய்வேலியில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் பேசினார் என கூறி, வாரியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக, வாரியாரின் சொற்பொழிவு கூட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்தது. 1971-ம் வருட தேர்தலுக்கு முன்பாக கல்கண்டு இதழில் அதன் ஆசிரியர் தமிழ்வாணன், திமு.க.வின் தேர்தல் அறிக்கையில் 16 வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. மீன்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டுமானால் 17 வது வாக்குறுதியாக, கிருபானந்த வாரியார் போன்ற சாதுக்களை, அவர்கள் எங்களுக்குப் பிடித்தம் இல்லாத விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்கள் என்பதற்காக, எங்கள் ஆட்கள் அடிக்கவோ, மிட்டவோ மாட்டார்கள். அப்படி எவராவது அவர்களை அடித்தாலோ அல்லது மிரட்டினாலோ, அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் உண்மையாகவே மேற்கொள்ளுவோம் என் சேர்க்க வேண்டும் என எழுதியிருந்தார். இது தி.மு.க. வின் அராஜகத்துக்கு எடுத்து காட்டாகும்.
அண்ணாமலை பல்கலை கழக சம்பவம் – 1971-ல் கருணாநிதி முதல்வராக பதவி ஏற்றவுடன், கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க அண்ணாமலை பல்கலைகழகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களில் ஒரு பிரிவினர் ( மாணவர் காங்கிரஸ் ) , கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதப்பட்ட அட்டையை தொங்கவிட்டு கேலி செய்தார்கள். பலத்த எதிர்ப்புகளுக்டையே கருணாநிதி பட்டமளிப்பு விழா நடைபெற்ற போதே, மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள், அறைகளில் தங்கியிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்க தொடங்கினார்கள். பலர் பலத்த காயமடைந்தார்கள். இதில் உதயகுமார் என்ற மாணவர் மறுநாள் காலையில் பல்கலை கழகத்திற்குள் உள்ள குளத்தில் பிணமாக கிடந்தார். போலீஸ் அடித்து கொலை செய்து குளத்தில் வீசி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் இன்று வரை உள்ளது. இந்த அராஜகத்திற்கு துணை போன அரசு கருணாநிதியின் அரசு. பட்டம் பெற்ற நவீன உயர்சாதி அகங்காரம் தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகக் குழப்பங்களுக்கு காரணம் என தா.பாண்டியன் கட்டுரை ஒன்றில் தெரிவித்திருந்தார்.














