“ மனுஸ்ம்ருதி “ போன்ற ஸ்ம்ருதி நூல்கள் , சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வகையான ஸ்ம்ருதி நூல்கள் நம்முடைய பாரத தேசமெங்கும் பொது யுகம் முதல் / இரண்டாம் நூற்றாண்டு முதலே மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன என முனைவர் G சங்கர நாராயணன் அவர்கள் “யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி ” குறித்த உரை ஒன்றில் குறிப்பிட்டார் .
இந்த நூல்களின் வரிசையில் முதலில் தோன்றியது மனுஸ்ம்ருதியே . ஒவ்வோர் ஸ்ம்ருதி நூலின் ஆசிரியர்கள் / ரிஷிகள் அருளிய இந்த ஸ்ம்ருதி நூல்கள் பண்டைய பாரதத்தில் அவ்வக் காலங்களில் வாழ்ந்த மக்களுக்கு – வாழ்க்கையை நெறிப்படுத்தி தர்மத்தை போதிக்கும் நூல்களாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன இதன் வடிவமைப்பு பெரும்பாலும் சூத்திரங்களாக உள்ளன ஏனெனில் நூல்களைத் தேடாமல் , நூலின் பொருளை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் பண்டைய முறை அல்லவா அது ?
இந்த இடத்தில் “ தர்மம் ” என்றால் என்ன என்ற வினா எழுகிறது . “யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி ” – “ சூதாடக் கூடாது ” என்ற தர்ம நெறியினை ஒரு ச்லோகத்தின் வாயிலாகக் கூறுகிறது . எக்காலத்துக்கும் மாறாத அறக் கருத்து அல்லவா இது ? ஆகவே அதர்மத்தை விடுத்து தர்ம நெறியில் மக்களை நிறுத்தும் இந்த நூல்கள் “ தர்மசாஸ்திர நூல்கள் ” எனப் பெயரிடப்பட்டு வழங்கப்படலாயின . எனவே இற்றைக்கு சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் பல்வேறு இடங்களில் பல ஸ்ம்ருதி நூல்கள்( தர்மசாஸ்திர நூல்கள்) பல்வேறு காலகட்டங்களில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன.
இதே காலகட்டங்களில் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு என்ன வகையான சட்டங்கள் இருந்தன ?
கிழகத்திய ரோமாபுரிப் பேரரசர் முதலாம் ஜஸ்ட்னியன் (Eastern Roman Emperor – Justinian I – 1 April 527 – 14 November 565 ) உருவாக்கியச் சட்டங்கள் (Corpus Juris Civilis, ) இந்த நாடுகளின் மக்களின் பயன்பாட்டில் சுமார் பொது யுகம் பதினெட்டாம் நூற்றாண்டு வரை பல்வேறு வடிவங்களில் இருந்தன . இந்தச் சட்டங்கள் எல்லாம் சமத்துவ சட்டங்களா ? இல்லை எனலாம் ஏனெனில் இவை எல்லாம் இன்றைய ஐரோப்பாவில் உள்ள நவீனக் குடியரசுகளின் சட்டங்களுக்கு சமமானவை அல்ல . பெண்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனை முழுதும் உறுதி செய்த சட்டங்கள் அல்ல .
“ எல்லாம் மனிதர்களும் சமம் ” என்ற கருத்துருவம் எல்லாக் காலங்களிலும் , நம்முடைய பாரத நாட்டில் மட்டுமல்ல உலகின் பிற எந்த நாட்டிலும் இல்லை .
“ எல்லாம் மனிதர்களும் சமம் ” என்ற கருத்துருவம் முதலில் ஓர் உன்னத விழுமியமாகக் கொள்ளப்பட்டு சமூக முன்னோடிகளின் பதாகைகள் தாங்கி , பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களின் வழியே முக்கியமாக பிரெஞ்சு ( French ) புரட்சிக்குப் பிறகு மெல்ல , மெல்ல இந்த நூற்றாண்டில் வந்து சேர்ந்துள்ளது . இன்னமும் இந்தப் போராட்டம் முடிவு பெறவில்லை ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ‘’ மனிதனுக்கு மனிதன் அடிமை அல்ல ‘ என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட உலகின் முதல் ஜனநாயக குடியரசான அமெரிக்காவிலே “ கறுப்பர்களின் உயிரும் முக்கியம் ” ( Black Lives Matter – BLM ) என்ற அறைகூவலை முன் வைத்து இந்த ஆண்டில் சில வாரங்களுக்கு முன்னர் மாபெரும் வன்முறை அங்கு வெடித்தது – இந்தக் காரணம் பற்றியே .
எனவே நம் நாடும் மட்டுமல்ல உலகின் எந்த நாடும் இதற்கு விதி விலக்கு அல்ல. நம்முடைய தர்மசாஸ்திர நூல்கள் பொது யுகம் முதல் நூற்றாண்டு முதலே பயன்பாட்டில் வந்துள்ளன என்று மேலே பார்த்தோம் . இதனை ஒட்டியே பண்டைய தமிழ் மன்னர்களும் தாங்களும் மனுநெறி படியே அரசு நடத்தி வந்தோம் என்று பிரகடனப்படுத்தி வந்துள்ளனர் . இது அவர் தம் மெய்க்கீர்த்திகளில் உள்ள செய்திகள்தான் .
உதாரணங்களாக மூன்று அரசர்களின் மெய்கீர்த்திகளை கீழே தந்து உள்ளேன் :.
வீரஇராஜேந்திரன் (கி. பி 1063 – 1070)
ஸ்வஸ்திஸரீ
புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின் செயல்வாய்ப்பத் திருமகளும் சயமகளும் சிறந்துவாழ வெண்மதிபோல் குடைவிளங்க வேலவேந்தர் அடிவணங்க மண்மடந்தை மனங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச் திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு யாண்டு ………..
குலோத்துங்கன் III. (கி. பி 1178 – 1218 )
ஸ்வஸ்திஸரீ
புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின் செயல்வாய்த்துத் திருமகளும் செயமகளும் சிறந்துவாழ வெண்மதிபோற் குடைவிளங்க வேல்வேந்தர் அடிவணங்க மண்மடந்தை மனங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச்
சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 – 1218)
ஸ்வஸ்திஸரீ
பூவின் கிழத்தி மேவிவீற் றிருப்ப மேதினி மாது நீதியிற் புணர வயப்போர் மடந்தை சயப்புயத் திருப்ப மாக்கலை மடந்தை வாக்கினில் விளங்கத் திசையிரு நான்கும் சையிலா வெறிப்ப மறைநெறி வளர மனுநெறி திகழ
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மெய்க்கீர்த்திகளில் “ மனுநீதி தழைத்தோங்கச் “ “மனுநெறி திகழ ‘’ என்ற சொல்லாட்சிகளை காண்க .
இது சரி , அரசர்கள் பற்றியது , அந்தக் காலங்களில் வாழ்ந்த வேளாண் மற்றும் வணிகக் குடிகள் இந்த மனுநெறியை ஏற்றனரா என்ற வினா எழுகிறது . நம்முடைய நாட்டில் அரசர்களின் மத்திய அரசுகளின் கீழே , ஒரு சுதந்தரமான அமைப்பான வேளாளர் – வணிகர் கூட்டமைப்பான ‘’ சித்திரமேழி நாட்டார் சபை ‘’ எவ்வாறு இயங்கி வந்தது என்று காணலாம் . இந்த சித்திரமேழி நாட்டார் சபை என்ற அமைப்பு அரசரின் தலையீடு இல்லாத தன்னளவில் சுயாட்சி பெற்ற ஓர் அதிகார அமைப்பாக நீதிபரிபாலனம் செய்து மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம் முதல் நாயக்கர் காலம் வரை இருந்தது .சபையின் செயல்பாடு திருநெல்வேலி முதல் இன்றைய ஷோலாப்பூர் வரையிலும் இருந்தது . இந்த அமைப்பினர் தமிழத்தில் சுமார் நாற்பதுக்கும் மேலான கல்வெட்டு முதலிய தொல்லியல் சான்றுகளை விட்டுச் சென்றுள்ளனர் .
இந்த சித்திரமேழி நாட்டார் சபை அமைப்புக்கும் அரசர்கள் போல மெயக்கீர்த்தியினை வெட்டிக்கொள்ளும் உரிமை இருந்துள்ளது . அதனை ஒன்றைக் கீழே தந்துள்ளேன் :
ஸ்வஸ்தஸ்ரீ திருவாய் கெழ்வி முன்னுடையதாக ஸ்ரீமத் பூதேவி புத்ராணாம்சாதூர் வர்ணஸ்யகுலோத்பஸர்வலோ ஹிதார்தாய சித்ர மேளஸ்ய ஸாஸநம்ஜகதாமேதத் பாலநம் ராஸ்ட்ர போஷணம்,ஸ்ரீ பூமி தேவிக்கு மக்களாகி நிகழச்செந்தமிழ் வடகலை தெரிந்து நீதிகேட்டு நிபுணராகி, எத்திசையும் விளங்கஇன்சொல்லால் இனிதளித்துவன்சொல்லால் மறங்கடித்து இச்சதுஸ்ஸாகர பரிமலத்துசந்திராதித்த வரை இனிதோங்க, வாதராசன் காற்றசைப்பவருணராசன் நீர்தெளிப்ப தேவராசன் திசை விளங்கஎத்திசை மகளிரும் இனிது வீற்றிருப்ப தெங்கும் பலாவும் தேமாஞ்சோலையும்வாழையும் கமுகும் வளர்கொடி முல்லையும் பூவையும் கிள்ளையும் பொலிவோடு கெழுமிmவாட்டமின்றி கூட்டம் பெருகிஅறம் வளர கலிமெலிய புகழ்பெருகு மனுநெறிதளைக்கபுரை பணியதிசையணைத்தும் செவிடுபடாமல் செங்கோலே முன்னமாகவும் சித்திரமேழியே தெய்வமாகவும் எழுபத்து ஒன்பது நாட்டு உத்தம நீதியும் உயர்பெரும் கீர்த்தியும் முத்தமிழ் மாலை மும்மையும் நிறைந்தசித்திரமேழி பெரிய நாட்டோம் க்ஷ்மையினோடு கருணை யேய்திசமைய தன்மம் இனிது நடாத்துகின்ற ராஜேந்திர பெருங்காளரோம்.
(தாமரைப்பாக்கம் கல்வெட்டுக்கள் மற்றும் A.R.E No: 197 of 1894, A.R.E No: 117 of 1900, A.R.E No: 21 of 1908 மற்றும் பல S.I.I தொகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டது
மேலே உள்ள மெயக்கீர்த்தியில் ““புகழ்பெருகு மனுநெறிதளைக்க” என்ற வரிகளை நோக்குக”ஆகத் தொடர்ச்சியாக சுமார் பொது யுகம் முதல் நூற்றாண்டு முதல் நாயக்கர் காலம் வரை மனுநீதி முதலிய தர்மசாஸ்திர நூல்கள் அரசர்களின் மற்றும் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன . பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களது சட்டங்கள் வநதன . பின்னர் நாடு குடியரசு ஆனது . அரசியல் அமைப்புச் சட்டம் பயன்பாட்டில் வந்தது .
ஆக இவ்வாறு அரசர்கள் , அந்தணர்கள் , வேளாளர்கள் , வணிகர்கள் , பிறர் என அனைவராலும் ஏற்கப்பட்டு நடைமுறையில் இருந்த வந்த தர்மசாஸ்திர நூல்கள் பலவும் அனைத்து மக்களின் ஆதரவு பெற்று இருந்து வந்துள்ளது .
இது இவ்வாறிருக்க “ பார்ப்பனர்கள் தந்திரமாக மனுதர்மத்தை இந்த நாட்டிலே வைத்து அனைத்து மக்களையும் அடிமைகளாக வைத்து சுரண்டலில் கொழுத்து இருந்தனர் “ என்ற குற்றச்சாட்டு வரலாறு – மற்றும் சமூவியலை அறிவியல் துணை கொண்டு ஆய்வு செய்வோர் ஏற்க முன் வருவார்களா ? .
இருந்திருக்க முடியாது – ஏனெனில்
ஒன்று – மக்களை நீண்ட காலம் ( 1800 ஆண்டுகள் ) அவர்களது தேவை / ஆதரவு இன்றி சட்டங்களை வைத்து நீதிபரிபாலனம் செய்து இருக்க முடியாது
இரண்டு – இவ்வாறு இந்த சட்டங்களை “ பார்ப்பனர் சதி ” என்று கூறுவோர் இது நாள் இருந்து இந்த சட்டங்களை ஒழுகி வந்த
அனைத்து மக்களின் பொது அறிவை கேலி செய்யும் போக்காகும்
இந்த “ தர்மசாஸ்திர நூல்கள் பிற்போக்கானவை ‘ என்றால் சமகாலத்தில் இதேபோல உலகெங்கிலும் இருந்த சட்டங்கள் மேலே சொன்ன ரோமானிய சட்டங்கள் உட்பட பிற்போக்கானவைதான் . அவை ஒரு காலத்தில் தேவைக்காக இருந்தன , பின்னர் இன்று தேவை ஒழிந்தன என்றே கொள்ள வேண்டும் .
மனுஸ்ம்ருதி போன்ற தர்மசாஸ்திர நூல்களில் உள்ள சில விஷயங்கள் இன்று பொருந்தவில்லை என்றால் அவற்றை அவ்வாறே எடுத்துக் கொள்ளவேண்டும் , அதை விடுத்து அந்தணர்களின் மீது பழி சுமத்துவது வரலாற்றியல் / அறிவியல் நோக்கு அன்று .














