பொது நோக்கின்படி ஆவெஸ்டன் உண்மையாகவே சமஸ்கிருதத்தை ஒத்தது. அது உண்மையானால் ஆவெஸ்டன் இந்தோ- ஆரியம் ஆக இருக்க வேண்டும். அல்லது இந்தோ-ஈரானிய மொழி, இந்திய மற்றும் ஈரானிய மொழிகள் உள்ளடக்கிய பல காலக்கட்டத்தில் இருந்த பலவகை ப்ரக்ரிதிய மொழிகளின் பிரிவுகளைக் கொண்டு, சமஸ்கிருதத்தை ஒத்தது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் மத்திய ஆசியாவின் சாக்க மொழிகள் ப்ரக்ரித் மொழிகளாகும். ஆனால் நாம் இவ்வளவு தூரம் போகாவிட்டாலும், தரிம் பள்ளத்தாக்கின் காந்தாரி மொழி இந்தோ-ஆரிய ப்ரக்ரித் ஆகும்.
சாக்க பகுதியில் இந்திய தெய்வச்சிலைகள் இருந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. இவை சிவ- மஹேஷ்வரா, ஸ்கந்தா, கணேஷா, நாராயணா, உமா மற்றும் மற்றையவர்கள். எடுத்துக்காட்டாக மாகோ குரோட்டர்கள் போல. சொரோஸ்ட்ரிய சோக்டியர்கள் தங்களது கடவுளை மஹேஷ்வரனோடு ஒன்றாய் இணைக்குமளவு சென்றனர்.
தரிம் பள்ளத்தாக்கும் கோட்டனும்
அநேகமாக தரிம் பள்ளத்தாக்கோடு பெருமளவு ஒப்பிடக்கூடிய பகுதி காஷ்மீராகும். கனிஷ்கா நான்காவது பௌத்த சபையை காஷ்மீரில் கூட்டினார். அதன் பின்னர் பல அறிஞர்கள் அங்கிருந்து கோட்டானுக்கும் அதற்கு அப்பாலும் பயணம் செய்ததன் மூலம் இரண்டு பகுதிகளுக்குமிடையே அதிக தொடர்பு ஏற்பட்டது.
காந்தாரி கல்வெட்டுகள் கிழக்கு சீனாவில் ஹெனன் மாகாணத்தில் உள்ள லுயோங் மற்றும் அன்யங் வரை காணப்பட்டன. இது சமஸ்கிருதத்தின் பரந்த செல்வாக்கை உறுதி செய்கிறது. சமீப நூற்றாண்டில், சீனாவும் இந்தியாவும் சந்திக்கும் இடத்தைக் குறிப்பதால் இந்த முழுப் பகுதியையும் செரிந்தியா என்று ஐரோப்பர்கள் அழைத்தார்கள்.
கோட்டானிய அரசர்கள் மஹாயான பௌத்தர்கள் ஆவர். ஆனால் இந்ந பிரிவு, இந்திரன், சிவன், விஷ்ணு, மற்றும் சரஸ்வதி ஆகிய கடவுள்களுடன் புத்தரை தலைவராக கொண்ட அமைப்பு, (வித்யாகரா கருவூலத்தில் உள்ளது போல) வேதம் மற்றும் தாந்திரிக அமைப்புகளை உள்ளடக்கியதாகும். கோட்டானில் கிருஷ்ண வழிபாடு இருந்தது. இராமரின் கதை கோட்டானிய மொழியில் காணப்பட்டது. அதன் திபெத்திய பதிப்பும் உள்ளது.
பௌத்தர்கள் இராமர் கதைக்கு ஒரு தனித்துவ உருவாக்கத்தை அளித்தனர். இது ஆசியா முழுவதிலும் உள்ள மக்களின் கற்பனைக்கு மகத்தான சக்தி அளித்தது. கோட்டானிய இராமாயணம் நிலையான இராமர் கதை அல்ல. இந்த கதையில் சஹஸ்ரபாகு (ஆயிரம் கரம் உடையவன்) என்னும் பெயர் கொண்ட தசரதர் பரசுராமருடன் போரிட்டு மாய்கிறார். அவருடைய மகன்கள் இராமரும் லக்ஷ்மணரும் ராணியால் காப்பாற்றப்படுகின்றனர்.அவர்கள் வளர்ந்ததும் பரசுராமரைக் கொன்று பழி தீர்த்து ஜம்புத்வீபாவின் தலைவராகின்றனர்.
இதற்கிடையே ராட்சதர்கள் இராவணனால்(தசாகிரீவா) ஆளப்படுகிறார்கள். அவனுடைய பட்டத்து அரசிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதுவே அவன் அழிவிற்கு காரணமாகும் என்று தீர்க்கதரிசனமாய் கணிக்கப்படுகிறது .எனவே அவன் அந்த பெண் குழந்தை சீதாவை ஒரு பெட்டியில் வைத்து பேராற்றில் வீச கட்டளை இடுகிறான். ஒரு ரிஷி அந்த பெட்டியை தற்செயலாக கண்டு அந்த பெண் குழந்தையை அன்பாக வளர்க்கிறார். இது ஓரளவு அத்புத்த இராமாயணத்தில் உள்ள விளக்கத்தை ஒத்தது போல் உள்ளது.
பிறகு இக்கதையில் இராமர், லக்ஷ்மனர் மற்றும் சீதை ஆகிய மூவரும் காட்டில் உள்ளனர். பின்னர் சகோதரர்கள் வேட்டையாட செல்லும் போது லக்ஷ்மனர் சீதையை சுற்றி பாதுகாப்பிற்காக ஒரு வளையம் வரைகிறார். தசகிரீவன் இந்த அழகிய மங்கையை வானத்தில் இருந்து பார்க்கிறான் . அது தன்னுடைய சொந்த மகள் என்று அறியாமல் அவளை நெருங்கி, அவளைக் கடத்தும் நோக்கோடு அந்த வளையத்தை விட்டு வெளியே வருமாறு தூண்டுகிறான்.
போர் நிகழ்கிறது, தசகிரீவன் தோற்கடிக்கப் படுகிறான். இறுதியில் இராமர் அவனை மாய்க்கவில்லை. இறுதியில் புத்த சாய்க்யமுனி இராமராகவும், மைத்ரேயன் லக்ஷ்மனராகவும் காணப்பட்டு, தசாகிரீவன் புத்தரிடம் வந்து லங்காவதாரசூத்ராவில் உள்ளது போல தர்மத்தின் போதனைகளைப் பெறுகிறான்.
தெற்கிலும் பட்டுப் பாதையின் மிகப் பழமையான கிளையுமாகிய கோட்டான் தோன்றியதன் பாரம்ரிய தேதி அசோக மௌரியரின் ஆட்சிகாலமாகும் (கி.மு.3ஆம் நூற்றாண்டு). இவை வடகிழக்கில் உள்ள இந்தியர்களால் முறைப்படுத்தப் பட்டது என்று இந்த விளக்கங்கள் நமக்கு தெரிவிக்கிறது. 1006இல் முகமதியர்களால் கைப்பற்றப்படும் வரை இது பௌத்த மன்னர்களால் ஆளப்பட்டது. CE.746ல் எழுதப்பட்ட “லீ மாகாணத்தின் தீர்க்கதரிசனத்தில்” குறிப்பிட்டது போல கடந்த கால நிகழ்வுகளை கையாண்ட சில அரசர்கள் ,விஜய கீர்த்தி, விஜய சங்கராம, விஜய தர்ம, விஜய சம்பவ மற்றும் விஜய வாஹன ஆவர்.
பல கோட்டானிய நகரங்கள் சமஸ்கிருத பெயர்களும் கொண்டனவாகும். எடுத்துக்காட்டாக, சமஸ்கிருதத்தில் கோட்டான் கௌஸ்தானா என்றிருந்தது (அல்லது கோஸ்தானா), மற்றும் நவீன நகரமான கஷி (கஷ்கர்) சமஸ்கிருதத்தில் ஷ்ரீ க்ரீ ராத்தி என்று அழைக்கப்பட்டது (“போற்றத்தக்க விருந்தோம்பல்”). கஷ்கரும் சமஸ்கிருதத்தில் உள்ள பிரபலமான காஸகிரி (“பிரகாசமான மலை”) என்ற பெயர் போல் தோன்றுகிறது. கோட்டானியர்கள் தங்களது மொழியை ஹவத்னை என்று அழைத்தனர். இது பின்னர் ஹ்வம்னை என்றாகியது; இது இந்தியாவில் மொழிகளுக்கு கூறப்படும் தேசி என்பதற்கு ஒப்பாகும் (வதன்,ஸ்வதனாவில் இருந்து =தேசா).
இந்தப் பகுதியில் வழிபாட்டு முறை புத்தகங்கள் பௌத்தம் கலந்த சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. ஆனால் கோட்டானுக்கு கிழக்கில்ஒரு முக்கியமான பாலைவனச்சோலையாகிய க்ரோரான் பகுதியில் (சீன லௌலான்), நிர்வாகத்தில் ப்ரக்ரித் மொழி பயன்படுத்தப்பட்டது. டோச்சாரின் என்னும் மூன்றாவது மொழி பௌத்த புத்தகங்களை மொழி பெயர்க்கவும் நிர்வாக மொழியாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் பல சமஸ்கிருத புத்தகங்கள் பொது பகுதியை துசாரா அல்லது துகாரா என்று நினைவு கூறுகிறது. மற்றும் கரன்சி என்பதை பிரபலமான முறையான பெயராக இன்னும் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
கோட்டானிய புத்தகங்கள் இந்திய ப்ரஹ்மி மற்றும் கரோஸ்த்தீ கையெழுத்துப் படிவங்களில் அமைந்திருப்பதைக் கொண்டு கோட்டானிய சக்கா முக்கியமாக ஒரு இந்தோ- ஆரிய ப்ரக்ரித் என்பது மேலும் வலுவூட்டப்படுகிறது. இதன் பல ஆவணங்கள் ஆரோல் ஸ்டெய்னின் சீன துருக்கிஸ்தான் ஆய்வில் சேகரிக்கப்பட்டது. கல்ஹானாவின் ராஜதரங்கினீயை மொழிபெயர்த்ததின் மூலம் அவர் பெயர்பெற்றவர். 5ஆம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை பல பகுதிகளில் இருந்து , கன்சூவில் உள்ள ஆயிரம் புத்தரகள் குகை உட்பட, பத்தாயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளை ஸ்டெய்ன் அறிந்து கொண்டார். இந்த புத்தகங்களின் பலவற்றை தொகுத்து மொழிபெயர்த்த முக்கிய அறிஞர் எச். டபிள்யூ. பெய்லி ஆவார். பல அறிஞர்களுக்கு இந்த இலக்கியம் ஒரு பிரபலமான ஆய்வுத்துறையாக இருந்து வருகிறது.
(தொடரும்)
முந்தைய பதிவு:பாகம்-1
மொழிபெயர்ப்பு ஆசிரியர்: நிர்மலா













