சீனா மீண்டும் எல்லையில் வாலாட்டியுள்ளது. இந்திய ராணுவத்தின் பதிலடி மிகவும் கடுமையாக இருக்கவே மீண்டும் பேச்சுவார்த்தை என்று பசப்புகிறது. இரு தரப்பிலும் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள். சீன தரப்பில் எண்ணிக்கை மிக அதிகம் என்கிறார்கள்.
எல்லையில் நடக்கும் ஊடுருவல்களை ஒப்பற்ற நமது ராணுவ வீரர்கள் தங்களது இன்னுயிர் ஈந்து தடுக்கிறார்கள், தேசம் காக்கிறார்கள். அவர்களுக்கு நமது வணக்கங்கள். ஜெய் ஜவான். ஆனால் நமது நாட்டையே சீன டிராகன் மறைமுகமாக சுற்றி வளைத்துள்ளதே, அதன் விவரங்கள் குறித்து அனைவரும் பேச மறுப்பது ஏன்? சுருக்கமாக சில விஷயங்கள்.
சீனப் பொருட்கள் இறக்குமதி
சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பிற்கான விவரங்களை கீழே உள்ள படம் தருகிறது.

தற்போதைய ஆட்சியாளர்கள் 2014 தேர்தலில் வெற்றி பெற்ற போது சுமார் 27000 கோடிகளுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். இது 2019 அக்டோபரில் 45000 கோடிகள் என உயர்ந்துள்ளது. 180 சதவீதம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பொருளாதார சரிவின் காரணமாக இது குறைந்துள்ளது. மீண்டும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் (ஏற்படுமா?) சீன இறக்குமதி அதிகரிக்கும்.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்துள்ள சீனா
இந்தியாவில் வருடம் தோறும் சுமார் 15 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆவதாக புகழ்பெற்ற IDC நிறுவனம் வெளியிட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சீன நிறுவனங்களின் பங்கு சுமார் 70 சதவிகிதம். அதாவது ஏறக்குறைய 10.5 கோடி சீனத் தயாரிப்பு மொபைல்களை வருடந்தோறும் இந்தியர்கள் வாங்குகிறார்கள்.

சராசரியாக ஒரு மொபைலுக்கு வெறும் 2000 ரூபாய்கள் மட்டுமே லாபம் என்று வைத்துக் கொள்ளுங்கள். 20000 கோடிகளுக்கும் மேல் வருடந்தோறும் சீனாவிற்கு நாம் வருமானம் தருகிறோம்.
சீனாவின் பிடியில் இந்திய நிறுவனங்கள்
இது மிகவும் விரிவாக எழுத வேண்டிய விஷயம். ரத்தினச் சுருக்கமாக சொல்கிறேன். ஃப்ளிப்கார்ட் (Flipkart), PayTm, Zomato, Swiggy, Ola இன்று இந்தியாவில் வீடுகளில் சகஜமாக புழங்கும் பெயர்கள். சற்று பெரிய நகரங்களில் Bigbasket. படிக்கும் குழந்தைகள் உள்ள வீடுகளில் Byju’s. இது ஒரு எடுத்துக்காட்டிற்கான பட்டியல் தான். இவை அனைத்திலும் சீன நிறுவனங்கள் பெருமளவு முதலீடு செய்துள்ளன. அதாவது இவை சம்பாதிக்கும் லாபங்களில் பெருமளவு சீனாவிற்கே செல்லும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

வெற்றிகரமாக செயல்படும் பெரும்பாலான இந்திய நிறுவனங்களில் சீனாவின் முதலீடு உள்ளது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது உங்கள் ஊகத்திற்கு.
இவற்றை எல்லாம் அரசை தொடர்ந்து ஆதரிக்கும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்புமே கடுமையாக எதிர்த்து வந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு சங் பரிவார் அமைப்பு. மிக சமீபத்தில் டெல்லியில் 1100 கோடிகளுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை STEC என்ற சீன நிறுவனத்திற்கு மத்திய மாநில அரசுகள் கூட்டாக வழங்கியுள்ளார்கள். அதனை மிகவும் கடுமையாக விமர்சித்து அந்த அமைப்பின் தலைவர் போட்டுள்ள ட்வீட் கீழே உள்ளது.

நம்மைப் போல நாட்டின் மீது அக்கறையுள்ள கட்சி சாராதவர்களும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்புமே கூட தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே தான் வருகிறார்கள்,. ஆனால் ஆட்சியாளர்கள் காதுகள் தான் கேட்க மறுக்கின்றன.














மக்களே போல்வர் கயவர்.