ஒரு ஊரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருக்கு எதையும் சூட்சமமாக புரிந்து செயலாற்றக்கூடிய சிஷ்யன் ஒருவனும் இருந்தான்.
அந்த மகானிடம் பாடம் கற்றுக்கொள்ள ஒருவன் வந்த நேரம் ஒரு சவ ஊர்வலம் மயானம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
மகான் சிஷ்யனிடம், “நீ சென்று இறந்தவன் எங்கு செல்கிறான்? என்று பார்த்து வா” என்றார். சிஷ்யனும் ஓடிச் சென்று சவ ஊர்வலத்தில் கலந்துவிட்டு சற்று நேரத்தில் திரும்பி வந்து, “குருவே அவன் நரகத்திற்கு செல்கிறான்” என்றான்.
குரு, “ஐயோ பாவம்! சரி. இன்று அவனுக்கும் சேர்த்து இறைவனிடம் பிரார்த்திப்போம்” என்றார்.
புதிதாக வந்தவர் திகைத்து, “எப்படி ஒருவன் இறந்த பின்பு எங்கு செல்கிறான் என்று உங்களால் சொல்ல முடிகிறது?” என்று கேட்க. . .
குரு, “சற்று பொறு”. என்று கூறி, “சிஷ்யா! அதோ பார் இன்னொரு சவ ஊர்வலம். அவன் எங்கு செல்கிறான் என்று பார்த்து வா” என்று கூற சிஷ்யனும் ஓடி சென்று சிறிது நேரம் கழித்து வந்து, “குருவே அவன் சுவர்க்கத்திற்கு செல்கிறான்” என்றான். இப்போது குரு, “சந்தோஷம். அவன் அவனுடனே செல்ல பிரார்த்திப்போம்” என்றார்.
புதிதாக வந்தவர், “குருவே இவற்றை சற்று விளக்குங்கள்” என்று கேட்க, குருவும், “குழந்தாய்! ஒரு ஆத்மா ஏதோ ஒரு உடலில் பிரயாணிக்கிறது. அந்த பிரயாணத்தின் போது சந்திக்கும் மற்ற உயிர்களிடத்தில் எப்படி நடந்து கொள்கிறது என்பதை பொறுத்தே ஒருவனுக்கு சுவர்க்கமும் நரகமும்… இதை எளிமையாக புரிந்து கொள்ள அதன் கடைசி யாத்திரையின் போது தெரிந்து கொள்ளலாம். எப்படிப்பட்ட கொடுமையானவராக இருந்தாலும் அவரை இறந்ததும் தூற்ற மாட்டார்கள். அப்படி இருந்தும் அவனை தூற்றினார்கள் என்றால் அவர் எவ்வளவு பெரிய கொடுமைகள் செய்திருப்பார்?? எனவே அவர்க்கு கிடைப்பது நரகமே. ஐயோ! போய்விட்டாரே இனி எனக்கு யார் உதவுவர்? என்ற அரட்டலும் புலம்பலும் கண்ணீருமாய் ஒரு சவ ஊர்வலம் செல்கிறது என்றால் அது நிச்சயம் சுவர்க்கத்திற்கு செல்வதோடு அவரின் புண்ணிய பலன்களையும் அவருடைய அடுத்த பிறவிப் பயணத்திற்கும் எடுத்து செல்கிறார். இது தான் என் சிஷ்யனும் கண்டு வந்து சொன்னது” என்று கூற கேட்டவர் சாஷ்டாங்கமாக குருவின் கால்களில் விழுந்தார்.
“கற்றதும், கற்றதை பின்பற்றுவதும், கற்றதை பிறர்க்கு கற்பிப்பதுமே வாழ்க்கை”














