சீனாவில் யுவான் பேரரசை ஸ்தாபித்த குபிலாய் கான் புத்த மதத்திற்கு மாறியதோடு மட்டுமல்லாது தனது பல்வளமுடைய பேரரசிற்கு உட்பட்ட பகுதியில் புத்த மதத்தை மாநில மதமென அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் திபெத்திலிருந்து புகழ்பெற்ற சாஸ்கியா பிரிவின் மாடாதிபதியான லாமா, ஃபாக்ஸ்பா லாமா ஐயோடாய் சால்ஸான் அவர்களை அழைத்து பௌத்த கோவிலின் தலைவராக்கினார். அவருக்கு தன் பேரரசிற்க்கு குருவாக அதாவது டி- ஷி என்று பட்டமும் அளித்தார் . குபிலாய் கான் மிகவும் திறமையாக லாமாவின் அதிகாரத் திறனையும் அறிவையும் தனது பரந்த பேரரசிற்கான செயல் திட்டத்திற்கு நன்கு பயன் படுத்திக் கொண்டார். இதற்கு ‘பாக்ஸ் – பா லாமா’ சரியான மனிதராவார். அவர் பெயர் பெற்ற லாமாவாக மட்டுமல்லாது பௌத்த இலக்கியங்களை நன்கு கற்றரிந்தவர்.
முக்கியமாக கடித படைப்புக்கள் அல்லது பண்டைய முனிவர்களாகிய நாகார்ஜுனா, மேட்ரசீட்டா,கேப்ட்ராகோமிங் மற்றும் பலரால் புத்த மதத்தின் முக்கிய அடிக்கோள்கள் , உலக பேரரசுகளின் கொள்கைகள் மற்றும் புனித சட்டங்கள் ஆகியவற்றை விளக்கும் நோக்கத்தோடும் எழுதப்பட்ட படைப்புகளை நன்கு அறிந்தவர். மேற்குறிப்பிட்ட முனிவர்கள் பாணியில் அவர் எழுதிய பல படைப்புகளில் ‘ஃபாக்ஸ்-பா லாமா தன்னால் முயன்றவரை இந்திய முனிவர்கள் தங்களை ஆதரித்த புரவலர்களாகிய அசோகர், கனிஷ்கர் போன்றோரை புகழ்ந்து பாடியது போல் குபிலாய் கானை உலக சக்கரவர்த்திகளின் சிறப்பம்சங்களை அளித்து புகழ்ந்துள்ளார். எப்படி தீயை தீயால் அணைக்க முடியாதோ ஆனால் நீரால் மட்டுமே முடியுமோ அது போல் அமைதியை அமைதியால் மட்டுமே பெறமுடியும் என்பதை வலியுறுத்தி இந்த திபெத்திய குரு குபிலாய் கானை புத்தரின் அகிம்சா போதனைகள் வழியில் அமைதி நெறியில் ஆட்சி செய்ய வலியுறுத்தினார். குபிலாய் கானின் கொள்கையின் அடிப்படை தத்துவத்தை உருவாக்கியது இந்த ‘ஃபாக்ஸ்- பா லாமா என்று கருதப்படுகிறது. இந்த தத்துவத்தின் படி கானின் வலிமையும் பௌத்த தர்மமும் இராஜ்யக் கொள்கைகளில் இரு முக்கிய கோட்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்த கொள்கை அதன்பின் வந்த கான்களால் ஏதோ ஒரு வகையில் பின்பற்றப்பட்டது. குபிலாய் கானின் இந்த இரு கோட்பாட்டு கொள்கை பரந்த செயல்விளைவுடையதாகவும் பல காலம் நிலைத்திருந்தது. அதனாலேயே மங்கோலிய பேரரசு சரிந்த பின்பும் மங்கோலிய கான்கள் இந்த கொள்கையை விடாது பின்பற்றினர்.
புத்த மதம் மங்கோலிய கொள்கையின் இந்தோ திபெத்திய காரணியாக சீனாவிலும் பிற இடங்களிலும் மங்கோலிய ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. ஆனால் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் நிலையான ஒரு சமுதாயத்தை ஆட்சி புரிய பெரிதும் உதவியது . மற்றும் வெற்றி கொண்ட நாட்டின் பெரும் ஜனத்தொகையிடையே ஒருங்கிணைக்கும் ஆபத்தை எதிர்கொள்ளவும் இக்கொள்கை உதவியது. சீனாவை வீழ்த்திய மற்ற நாடோடிகள் போல் அல்லாமல், மங்கோலியர்கள் தஙகளது வாழ்க்கை அம்சங்களின் பெரும்பானவற்றை வெற்றிகரமாக தொடர்ந்து பின்பற்றி வந்தனர் – உணவு முறையில் இருந்து உடை பழக்கம் மற்றும் மொழி பயன்பாடு வரை , தங்களது ஆட்சியின்போது அவர்கள் ஆதிக்கத்திட்குட்பட்ட ராணுவ மற்றும் அரசியல் அமைப்புகள் வரை இவ்வம்சங்கள் கடைபிடிக்கப்பட்டன. சீனர்கள் அவர்களிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பின்னும் தங்களது தாய் நாட்டிற்கு திரும்பிய மங்கோலியர்கள் தங்களது ஆட்சியை மீண்டும் சீனாவில் அமைக்க முயன்றனர். ஆனால் அது வெற்றி அடையவில்லை. இதுவரை நான் கூறியது முக்கியமான விஷயம் அல்ல. மங்கோலிய வரலாற்றில் இந்தோ மங்கோலிய உறவிற்கு பின் விளைந்த பாதிப்பே முக்கியமானதாகும்.
பெரும்பாலும் இந்தோ மங்கோலிய தொடர்பு மறைமுகமாகனதாக இருந்தாலும் இந்தியாவில் புத்த மதம் செழிப்புற்றிருந்த காலத்திற்கு பின்னர் ஏற்பட்டிருந்தாலும் இந்த தொடர்பால் வியக்கத்தக்க வகையில் ஏற்பட்ட கலாச்சாரம் மற்றும் ஆன்மீக விளைவுகள் மிகப் பெரியதாகும். மேலும் அது தற்காலத்திற்கு முன்பு வரை பல நூற்றாண்டுகள் நீடித்தது.
XYI நூற்றாண்டின் இறுதியில் மங்கோலிய பேரரசின் அழிவிற்கு பின் மங்கோலியாவில் புத்த மதம் அழியத்தொடங்கியது உண்மை. அப்போது ஷாமனிசம் மங்கோலியாவில் தனது இடத்தை பிடித்தது. (வடக்காசியாவில் சூன்ய நம்பிக்கை அடிப்படையில் ஷாமன்களால் ஏற்படுத்தப் பட்ட மதம் தான் ஷாமனிசம்). ஆனால் திபெத் வழியாக மங்கோலியர்களுக்கும் புத்த மதத்திற்கும் ஏற்பட்ட உறவு முழுமையாக தடைபடவில்லை. திபெத்தின் பல பிரிவுகளாகிய ஸா-ஸ்கியா-பா, கர்மா- பா மற்றும் லாமாசியத்தின் கெலுப்-பா ஆகியவற்றோடு மங்கோலியாவின் பல பகுதிகளுக்கு இடையே இருந்த தொடர்பை நிரூபிக்கும் வரலாற்று தருவை ஆதாரங்கள் ஊர்ஜிதப்படுத்துகிறது. மேலும் XYI நூற்றாண்டின் இரண்டாம் பகுதி மங்கோலியாவில் புத்த மதத்தின் மறுமலர்ச்சி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மங்கோலியர்களின் சக்தி வாய்ந்த ஆட்சியாளர்கள் திபெத்திலிருந்து புத்த மதத்தின் பல வகைகளை தழுவுதற்கு தங்களிடையே தீவிரமாக போட்டியிட்டனர்.
XYI நூற்றாண்டின் இறுதியில் பெரும்பாலான மங்கோலியர்கள் திபெத்திய புத்த மதத்தின் முக்கிய பிரிவாகிய லமாய்சத்திற்கு மாறியிருந்தனர். மங்கோலியாவின் பல பகுதிகளில் மடாலயங்கள் கட்டப்பட்டன. பௌத்த கல்வி மற்றும் இலக்கிய நடப்புகள் மேலும் வளர்ச்சி அடைந்தது. மங்கோலியாவிற்கும் திபெத்திற்கும் இடையிலான உறவு மங்கோலிய பேரரசின் காலத்திற்கு பின் இருந்ததை விட மிகவும் வலுவுற்றது.
அந்த காலத்தில் இரு நாடுகளுக்கிடையே ஒரு வகையான ஆன்மீக மற்றும் ராணுவ உடன்பாடு உருவானது என்று கூறலாம். வட திபெத்தை ஆண்ட அல்டான் கான் மற்றும் திபெத்தின் மூன்றாவது தலாய் லாமா ஆகிய இருவருக்கும் இடையே 1586இல் நடந்த வரலாற்று சந்திப்பில் ஆசான்- உறவை ஸ்தாபிக்க முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கனவே கூறப்பட்ட இரண்டு நியமங்களைக் கொண்ட குபிலாய் கானின் கொள்கையை, தலாய் லாமா மற்றும் மங்கோலிய அரசர்கள் தங்களது சக்தியை மேலும் வலுப்படுத்த இந்த கொள்கையை தங்களால் இயன்றவரை அமுல்படுத்தினர். இதற்கிடையில் மத்திய ஆசியாவில் ஒரு புதிய ஆட்சி வளர ஆரம்பித்தது, அது வடகிழக்கு சீனாவின் மஞ்சூ பேரரசாகும். மஞ்சூரியர்கள் தங்கள் பேரரசில் இருந்த திபெத்திய புத்த மதத்தை அண்டை நாடுகளில் முக்கியமாக மங்கோலியாவில் தங்களது கொள்கைகளை வளர்க்க கையாள ஆரம்பித்தனர். இவ்வாறாக திபெத்திய புத்தமதம் உள் ஆசியாவின் வலிமை வாய்ந்த மதம் மற்றும் அரசியல் சக்தியாக உருவானது. மற்ற எதிர் படையெல்லாம் தங்களது அரசியல் லட்சியம் நிறைவேர இதை பயன்படுத்த முயன்றனர். திபெத்திய பௌத்த மதத்தை ஆதரிக்கும் போராட்டத்தில் மற்ற எல்லோரையும் விட மஞ்சூரியர்களே பெரிதும் வெற்றி பெற்றனர். மஞ்சூ ஆட்சியாளர்கள் மங்கோலியர்களை எதிர்த்து தங்களது விரிவாக்கத்தில் திபெத்திய காரணிகளை திறமையாக கையாண்டனர். இந்த வகையில் இறுதியில் மங்கோலிய ஆட்சியாளர்கள் மஞ்சூரியர்களை விட குறைந்த பலமும் திறமையும் கொண்டவர்களாக மாறினர். மஞ்சூரியர்களுக்கு எதிராக தங்களது பலத்தை ஒன்றிணைக்க அவர்களால் இயலவில்லை. மஞ்சூரியர்கள், மங்கோலியர்களின் தேச மற்றும் சமய உணர்வுகளோடு திறமையாக விளையாடினர். முதலாவதாக அவர்களது இன மற்றும் கலாச்சார இணக்கத்தை சாதகமாக பயன்படுத்தி, தாங்களே சிங்கிசித்தின் சரியான வாரிசுகள் என்று பிரகடன படுத்தி, சிங்கிசித்தின் மாபெரும் சாம்ராஜ்யத்தை மீண்டும் மீட்டெடுக்க போவதாக ஒரு பிரச்சார இயக்கத்தை தொடங்கினர். மங்கோலிய கான்களின் தேச முத்திரையை தாங்கள் பெற்றுக் கொண்டதாக உரிமைக் கோரினார்கள் .
இரண்டாவதாக மஞ்சூரிய அரசர்கள் தாங்களே புத்த மதத்தின் உண்மையான காப்பாளர்கள் என்று அறிவித்து திபெத்தின் மதஅதிகாரிகளுடன், மலாய் லாமாவோடும் கூட நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். மஞ்சூ பேரரசின் அபாகாய் அவர்கள் புத்த மதத்தின் பிரதான பாதுகாவலரும் திபெத்தியர்களாலும் மங்கோலியர்களாலும் பெரிதும் வழிபடப்பட்ட மஹாகாலாவிற்கு மிகப்பெரிய கோவிலையும் கட்டினார். இந்த கோவிலை தன் இராச்சியத்தில் உள்ள அனைத்து பௌத்தர்களுக்கும் ஒரு மாநில சரணாலயமாக அமைக்க அவர் விரும்பினார். மஞ்சூரியர்களின் இந்த சூழ்ச்சிகள் அனைத்தும் மங்கோலியர்களின் ஆதரவையும் இரக்கத்தையும் பெற பெரிதும் உதவின என்று நாம் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமில்லை. தெளிவாக மேற்கு மங்கோலியர்களுக்கு எதிரான போராட்டத்தில் மஞ்சூரியர்களின் ஆதரவை கோர முடிவெடுத்த மங்கோலியாவின் முதல் போக்தோ கெகன், மஞ்சூரியர்கள் தங்கள் கலாச்சாரத்திலும் மதத்திலும் மங்கோலியர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று அறிவித்ததாக கூறப்படுகிறது.
மங்கோலிய நிலப்பரப்பை கைப்பற்றியபின் மஞ்சூரியர்கள் திபெத்திய புத்தமதத்தை எல்லா வகையிலும் தொடர்ந்து ஆதரிப்பதில் உறுதியாக இருந்தனர். இன்னும் கூறப்போனால் மஞ்சூரியர்களின் ஆதிக்கத்தில்தான் புத்தமதம் மங்கோலியர்களின் முக்கிய மதமானது. மேலும் அந்த நாட்டின் தனிமைத்துவம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சூழ்நிலையின் இறுதியில் புத்தமதம் மட்டுமே மங்கோலியர்களின் வாழ்வில் ஒரே உந்து சக்தியாக இருந்தது. XX ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கல்கா மங்கோலியாவில் ஏறத்தாழ 750 பௌத்த மடங்கள் இயங்க ஆரம்பித்தது. மற்றும் அந்நாட்டின் மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதத்தினர் லாமாக்களாக இருந்தனர். ஷெர்பட்ஸ்கி என்னும் புகழ்பெற்ற ரஷ்ய நாட்டின் இந்திய நாடு மற்றும் மக்கள் ஆய்வாளர் XXஆம் ஆண்டு மங்கோலியாவிற்கு வருகை தந்த போது அந்நாளைய மங்கோலியாவை புத்தமதம் தழைத்திருந்த இடைக்கால இந்தியாவோடு ஒப்பிட்டார்.
நாளடைவில் மங்கோலியா இந்தோ- திபெத்திய உலகின் ஒரு அங்கமாக மாறும் வகையில் மங்கோலியாவில் பௌத்த செல்வாக்கு மிகுந்திருந்தது என்றே நான் கூறுவேன். மஞ்சூரியர்களின் ஆட்சியின் கீழ், அதை ஆண்டவர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக மங்கோலிய கான்கள் என்று உரிமை கோரினாலும், மங்கோலிய வரலாற்று ஆசிரியர்கள் சிங்கிசித் வம்சத்தின் பரம்பரையானது இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சாதாரண மன்னர்களின் நீண்ட வம்சாவளியோடு உறவு கொண்டிருந்ததாக ஒரு கதையை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர் என்று சுவாரஸ்யமாக குறிப்பிடலாம். அவர்கள் இந்திய, திபெத்திய மற்றும் மங்கோலிய மன்னர்களிடையே ஒரு அசாதாரணமான அற்புத பொது வம்சாவளியை தொடர்பு படுத்தினர். மற்றும் இந்த பரம்பரையியலின் படி சிங்கிசித்தின் பொற்கால குலத்தின் சுவடுகள் புராண கால மன்னராகிய மஹாசம்மத்தாவின் காலம் தொட்டு அறியப்படுகிறது. மஹாசம்மத்தா பௌத்த உலக அரசர்களின் மூதாதையர் என்று நம்பப்படுகிறது. மங்கோலிய வரலாற்றாசிரியர்கள் தங்களால் முடிந்த அனைத்து வகையிலும் மங்கோலியாவை பௌத்த இந்தியாவோடு தொடர்பு படுத்த முயன்றனர். வரலாறு எழுதுவதில் அவர்கள் ஒரு சிறப்பு திட்டத்தை விரிவு படுத்தினர் – அதாவது இந்தியா, திபெத் மற்றும் மங்கோலியாவின் மூன்று பௌத்த அரசாட்சி திட்டம் என அறியப்பட்டதாகும். பழைய மங்கோலிய சரித்திரத்தை படித்தோம் என்றால் எவ்வாறு இந்த திட்டம் பக்தி சிரத்தையுடன் அதன் ஆசிரியர்களால் சமீப காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டது என்று அறியலாம். மாபெரும் மங்கோலிய கான்கள் பலவகை பௌத்த கடவுள்களின் அவதாரமாக அறிவிக்கப்பட்டனர்– சிங்கிஸ் கான் வஜ்ரபாணியின் அவதாரமாகவும் குபிலாய் கான் மஞ்சுஷிரியின் அவதாரமாக அறிவிக்கப்பட்டனர்.
மொழிப்பெயர்ப்பு ஆசிரியர்:நிர்மலா கிருஷ்ணகுமார்
(தொடரும்)
முந்தையப் பதிவு: பாகம்-1














