பலருடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக, நவீன ஊடக வாசகங்கள் கூறுவது போல இரண்டு மாபெரும் இராட்சதர்களாகிய ரஷ்யா மற்றும் சீனாவிற்கிடையே சிக்கிக் கொண்ட மங்கோலியா, முழுமையாக வெளி உலகத்தினின்று தனிமைப்படுத்தப்பட்ட நாடல்ல. மாறாக அது, இந்தோ-ஈரானிய, சீன-திபெத்திய, நவீன காலத்திற்கு முந்தைய பழைய யுரேசியா மற்றும் தற்கால ஐரோப்பிய-அமெரிக்கா போன்ற பெரும் நாகரீகங்களோடு என்றும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.
மங்கோலியர்களின் நாடோடி உலகிற்கு எப்போதும் வெளிஉலகத்தின் தொடர்பு தேவைப்பட்டது என்றும் அதன் சரித்திரத்தில் வெளிப்புற காரணிகள் பெரும் பங்கு வகுக்கிறது என்றும் அறிஞர்கள் வலியுறுத்தும் கருத்துக்களை நான் பகிர்கிறேன்.
மங்கோலியாவின் புவியியல் மற்றும் புவிசார் அரசியல் எப்பொழுதும் மனித நாகரிகத்தின் இரண்டு முக்கிய கூறுகளான நாடோடி மற்றும் நிலையான நாகரிகங்களிடையேயான பரஸ்பர
உறவிற்கு சாதகமாக உள்ளது. மங்கோலியாவின் மாபெரும் பரப்பளவு பல நாகரிகங்களுக்கிடையே எப்போதும் ஒரு பாலமாக இருந்து வருகிறது. இன்னும் உறுதியாக கூறப்போனால் அதன் பெரும் நெடுஞ்சாலைகள் அன்று முதல் கிழக்கையும் மேற்கையும்
இணைத்துள்ளது.
எடுத்துக்காட்டாக தெப்புவெளிகளின் பட்டு பாதை என்று சில சமயங்களில் அழைக்கப்படும் பெரும் பட்டு பாதையும் யுரேசிய பரந்த புல்வெளிகளும் மத்திய தரைக் கடல் மற்றும் தன்யூப் ஆறிலிருந்து சீனப்பெருஞ்சுவர் வரை படர்ந்துள்ளது. மிகவும் சிறந்த நகரும் கூட்டமாகிய இந்த நாடோடி மக்கள் உலகின் பலதரப்பட்ட பகுதிகளின் மக்கள் மற்றும் நாகரீகங்களின் பரஸ்பர தொடர்பில் முக்கிய பங்கு வகித்தனர்.
அதிநவீன தகவல் தொடர்புடைய இக்கால உலகத்தில் அவர்கள் வகித்த பங்கு அவர்களுடைய முந்தைய காலத்தில் இருந்ததைவிட எந்த அளவிற்கும் குறைந்ததில்லை என்று நான் கூறுவேன். மேற்குறிப்பிட்ட பாதைகளின் வழியே கலாச்சாரம், கருத்து மற்றும் தகவல்கள் மிக தாராளமாக பரிமாறப்பட்டன.
இப்போது நம் தலைப்பிற்கு வருவோம். வரலாற்று அரங்கில் மங்கோலியா தோன்றுவதற்கு பல காலங்களுக்கு முன்பே தனது நாகரிகத்தின் மூலம் இந்தியா நன்கு அறியப்பட்டிருந்தது. புத்த மதமானது மங்கோலியாவில் குடியேறிய பழங்குடியினர்களான
ஹுசியங்-நு, சியன்-பி, தோபா, துருக்கி மற்றும் யுகர்கள் ஆகியோர்கள் இடையே முதன் முதலில் பரவியது.
ஆரம்ப காலத்தில் புத்த மதமானது மத்திய ஆசிய நாடுகள் வழியாக மங்கோலிய புல்வெளிக்கு பரவியது. மத்திய ஆசியாவின் கிழக்கு பகுதியில் புத்த மதத்தை அறிமுகப் படுத்தியதில் சோக்டியர்கள் (இந்தோ ஐரோப்ப பிரிவில் கிழக்கு ஈரானைச் சேர்ந்த இடம் சோக்டியானா), கோட்டானியர்கள் (கோட்டான், தற்போதைய ஹீடியானை மையமாக சுற்றி இருந்த பண்டைய ராஜ்யம்) மற்றும்
யுகுர்கள் (மேற்கு சீனாவை பூர்வீகமாகக் கொண்ட துருக்கியர்கள்) ஆகியோர் மிக பெரிய பங்கு வகித்தனர்.
சமஸ்கிருதத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெரும்பாலான மங்கோலிய வார்த்தைகள் யுகுர் எழுத்திலிருந்து எடுக்கப்பட்ட கோட்டனி மற்றும் சோக்டியன் வடிவில் அமைந்ததாகும்:எடுத்துக்காட்டாக:
சமஸ்கிருதம்: வின்யா ; ஸஸனா. ; ஜடகா. ; வஜ்ரா ; மஹாராஜா
கோட்டனி :வினய். ; ஸாஸனா ;சோக்டியன். :வினய். ; ; சித்திக். ; ப்க்ர். ; மிர்க்யுகுர். :வினய். ; ஸாஸின். ; கடிக். ; வ்க்ர். ; ம்ஹார்க் .
நாடோடி மக்களுள் மிகுந்த முன்னேற்றம் கொண்ட யுகுர் இனத்தவர்கள் 8ஆம் மற்றும் 9ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலியாவில் தங்களது சக்தி வாய்ந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கினர்.
மங்கோலியாவில் அவர்களது சாம்ராஜ்யம் சரிந்த பிறகே கிழக்கு துருக்கிஸ்தானுக்கு பெயர்ந்தனர்.சோக்டியர்கள் மற்றும் யுகுரர்களிடம் இருந்து மங்கோலியர்கள் தங்களது எழுத்து வடிவைப்
பெற்றனர். இந்த எழுத்து வடிவம் ஃபொனீஷிய – அராமிய எழுத்து அமைப்பிலிருந்து தோன்றியதாகும்.
சோக்டியன் – யுகுர் எழுத்து வடிவம் மங்கோலிய மொழியில் தழுவப்பட்டப் பின், பல நூற்றாண்டுகளாக கற்றலுக்கும் இலக்கியத்திற்குமான இணைக்கமுள்ள கருவியாக பயன்பட்டு
வந்தது. அணைத்து புத்த மத சூத்திரங்களும் மங்கோலிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு யுகுர் எழுத்து வடிவில் அமைக்கப்பட்டது.
இந்தோ – மங்கோலிய நீண்ட கால தொடர்பு பற்றி நாம் விளம்பினாலும் அந்த தொடர்பு பிற்காலத்தில் உறுதியாக வளர்ந்து 13ஆம் நூற்றாண்டு முதல் நவீன காலம் வரை நிலைத்திருந்தது. 1206ஆம் ஆண்டு ச்சிங்கீஸ் கானால் நிறுவப்பட்ட மங்கோலியா பின் வந்த வாரிசுகளின் காலங்களில் உலக வரலாற்றிலேயே மாபெரும் சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. அந்த ராச்சியம் பெரும்பாலான ஆசிய நாடுகளையும் ஐரோப்பாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி தூர
கிழக்கிலிருந்து கிழக்கு ஐரோப்பா வரை நீண்டிருந்தது.
1220 மற்றும் 1230களில் மங்கோலிய துருப்புகள் மத்திய ஆசியாவில் இருந்து இந்திய எல்லைக்கு பலமுறை படையெடுத்து வந்தாலும்
மங்கோலியர்களால் இந்தியாவை வெல்ல முடியவில்லை. மாறாக, இந்திய நாகரிகம் மங்கோலிய தெப்புவெளிகளில் தனது படையெடுப்பை தொடர்ந்து கொண்டிருந்தது.இரண்டு மாறுபட்ட பக்கத்தில் இருந்து புத்த மதத்தின் இரு பெரும் பலம்பொருந்திய
பிரிவுகள் மங்கோலியாவில் ஊடுருவியது. அவை மத்திய ஆசியா மற்றும் திபெத் மற்றும் சீனாவாகும்.
வட இந்தியாவின் பல பகுதிகளோடு மங்கோலியாவின் நேரடி தொடர்பிற்கான சாத்தியக்கூற்றை இது விலக்கவில்லை, முக்கியமாக காஷ்மீரில் புத்த மதம் அங்கு செழிப்படைந்த காலக்கட்டத்தில். ஒகிடி கான் அவர்களது ஆட்சியின்போது காஷ்மீர துறவி நமு அவர்கள் தனது சகோதரருடன் மங்கோலிய அரசவைக்கு வந்தார் என்று சீன ஆதாரங்கள் மூலம் நாம் அறிவோம். துறவி நமு ஒகிடி கானிற்கு பின் ஆண்ட குயூக் மற்றும் மோன்கே கான் ஆகியோர் காலகட்டத்திலும் அங்கு இருந்தார். மோன்கே கான் அவரை குவோ-ஷி யாக அதாவது மாநில குருவாக நியமித்தார். பௌத்த விவகாரங்களை நிர்வகிக்க அவருக்கு மாணிக்கக்கல் முத்திரை வழங்கப்பட்டது. மங்கோலிய அரசவையில் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரிடம் பத்தாயிரம் காஷ்மீர குடும்பங்களின் தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டது .
மோன்கே கானின் இளைய சகோதரன் குபிலாய் கானிடமும் நமு சிறந்த உறவு கொண்டிருந்தார்.
பௌத்தர்களுக்கும் சீன தாவோவிஸ்ட்களுக்கும் இடையே நடந்த விவாதங்களில் நமு அவர்கள் திபெத் நாட்டின் பாக்ஸ்-பா லாமாவுடன் சேர்ந்து பௌத்தர்களுக்கு பேராதரவு அளித்து பேசியதன் விளைவாக அந்த சாம்ர்ஜ்யத்தில் பௌத்தர்கள் அதுவரை வகித்த நிலையை மேலும் உறுதிப்படுத்தினார்.
நாம் எதிர்பார்ப்பதைவிட புத்த மதம் மங்கோலிய சாம்ராஜயத்தின் ஆரம்ப காலத்தில் மங்கோலிய அரசவையில் மிகுந்த செல்வாக்குடைய நிலையில் இருந்தது என்றே நான்
கூறவேண்டும்.
1346 இல் உகெய்டெய் கான் ஆட்சியில் உள்ள கல்வெட்டின்படி அங்கு ஒரு பெரிய பௌத்த மாளிகை மற்றும் பலவகைப்பட்ட புத்த உருவச்சிலைகள் அடங்கிய ஐந்து அடுக்கு உயர கூடாரங்களால் நிரம்பிய ஸ்தூபிகள் கப்பட்டன. இந்தோனேஷியாவில் உள்ள புகழ்பெற்ற போரோபுதூர் ஸ்தூபியில் உள்ளது போன்று கரக்கோரத்தில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
கரக்கோரத்தில் பல புத்த கோவில்கள் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.மங்கோலிய அரசவையில் பௌத்த நூல்கள் வாசிக்கப்பட்டும் மொழிபெயர்க்கப்பட்டும் மதங்களைப் பற்றிய விவாதங்களும் நடத்தப்பட்டன. கரகோரத்தில் புத்த மதம் மட்டும் பிரபலமாகவில்லை. மற்ற மதங்களாகிய நெஸ்டோரியனிசம் (இயேசுநாதர் தெய்வீகத்தன்மையும் மனிதத்தன்மையும் வெவ்வேறு கொண்டிருந்தார் என்று முற்காலக்கான்ஸ்டாண்டினோப்பிள் சமய முதல்வர் நெஸ்டாரியஸ் என்பவரின் கொள்கையை சார்ந்தது),
கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களும் பெயர் பெற்றிருந்தது. மங்கோலிய கான்கள் மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் மதசகிப்புத்தன்மை அதிகம் கொண்டவராக இருந்தனர்.
மோங்கே கானை சந்தித்த ருபுக்கின் வில்லியம் என்னும் பிரான்சிஸ்கன் துறவியின் கூற்றுப்படி,மங்கோலிய கான் பின்வருமாறு கூறினார்:
“மங்கோலியர்களாகிய நாங்கள் ஒரே கடவுளை நம்பிகிறவர்கள். அவரால் ஜீவித்து அவரால் மரணித்து அவரிடத்தில் நேர்மையான இதயம் கொண்டவர்கள்…….எவ்வாறு இறைவன்
கைகளுக்கு பல விரல்களை கொடுத்துள்ளார் அதுபோல் மனிதர்களுக்கும் வெவ்வேறு வழிகளை கொடுத்துள்ளார்.”
மோங்கே கானின் வார்த்தைகள் இன்றைய மங்கோலியாவை ஊடுருவும் மத சகிப்பின்மை உடையவர்களுக்கு புதிதாகவும் அறிவுரை போன்றும் தோன்றும்.குபிலாய் கானும் அவருக்கு பின் வந்தவர்களும் சீனாவை ஆண்டு வந்த சமயத்தில் மங்கோலிய சாம்ராஜ்யத்தின் யுவான் காலகட்டத்தில் இந்திய மங்கோலிய உறவின் வரலாற்றில் ஒரு புதிய காலம் உருவானதை அறிவோம்.
சீனாவில் இருந்த மங்கோலியர்களுக்கு இருவகை இந்திய பௌத்தமதத்தை அணுகக்கூடியதாக இருந்தது. அவை சீன மற்றும் திபெத்திய புத்தமத வகைகளாகும்.
மங்கோலிய கான்கள் பிந்தையதை, அதாவது திபெத்திய வகை புத்தமதம் அல்லது சாஸ்கிய பிரிவின் முயற்சியால் திபெத்தில் பெரிதும் பிரசித்தி பெற்ற தாந்திரிக புத்தமதத்தை விரும்பினர். மங்கோலிய கான்கள் திபெத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்.
ஏனெனில் புத்த மதத்தின் மையமாக திபெத் விளங்கியதால் அதை கன்ஃபூஷியஸத்தின் எதிர் சமநிலையாக பயன் படுத்த விரும்பியதோடு சீனாவின் மீது அவர்களுக்கு இருந்த ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள நினைத்தனர். மங்கோலிய துருப்புகளால் திபெத் கைப்பற்றப்படவில்லை. அது தனது குடியுரிமை தன்மையை மகிழ்வுடன் அனுபவித்தது. மங்கோலிய கான்கள் சீனர்கள் அல்லாத, பெரும்பாலும் மத்திய ஆசியர்கள் சீனாவின் அதிகாரத்துவத்திலும் நிர்வாகத்திலும் பதவி வகிக்க விரும்பியதால் புத்த மதமும் அதன் கலாச்சாரமும் தங்களது சாம்ராஜ்யத்தில் விளங்க விரும்பினர்.
அக்காலக்கட்டத்தில் திபெத், இந்திய புத்தமதத்திலிருந்து தாங்கள் பெற்ற அனைத்தையும் மங்கோலியாவிற்கு தருவித்து இந்தியாவிற்கும் மங்கோலியாவிற்கும் இடையே பல காலமாக ஒரு இடை கூடாரமாக இருந்தது. சீனாவில் யுவான் பேரரசை ஸ்தாபித்த குபிலாய் கான் புத்த மதத்திற்கு மாறியதோடு மட்டுமல்லாது தனது பல்வளமுடைய பேரரசிற்கு உட்பட்ட பகுதியில் புத்த மதத்தை மாநில மதமென அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் திபெத்திலிருந்து புகழ்பெற்ற சாஸ்கியா பிரிவின் மாடாதிபதியான லாமா, ஃபாக்ஸ்பா லாமா ஐயோடாய் சால்ஸான் அவர்களை அழைத்து பௌத்த கோவிலின் தலைவராக்கினார். அவருக்கு தன் பேரரசிற்க்கு குருவாக அதாவது டி- ஷி என்று பட்டமும் அளித்தார் . குபிலாய் கான் மிகவும் திறமையாக லாமாவின் அதிகாரத் திறனையும் அறிவையும் தனது பரந்த பேரரசிற்கான செயல் திட்டத்திற்கு நன்கு பயன் படுத்திக் கொண்டார். இதற்கு ‘பாக்ஸ் – பா லாமா’ சரியான மனிதராவார். அவர் பெயர் பெற்ற லாமாவாக மட்டுமல்லாது பௌத்த இலக்கியங்களை நன்கு கற்றறிந்தவர்.
(தொடரும்)
மொழிப்பெயர்ப்பு ஆசிரியர்:நிர்மலா கிருஷ்ணகுமார்













