ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 15 நாடுகள் இடையே, தாராள வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது.
இதற்காக நடந்த பேச்சுகளில் இருந்து, இந்தியா, கடந்தாண்டு வெளியேறியது. இந்த புதிய ஒப்பந்தம், சீனாவுக்கு மிகவும் சாதகமானதாகவும் உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாக கருதப்படுகிறது.
ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் மற்றும் எப்.டி.ஏ., எனப்படும் தாராள வர்த்தக நாடுகள் இணைந்து, தாராள வர்த்தகம் செய்வதற்காக, ஆர்.சி.இ.பி., எனப்படும் மண்டல விரிவான பொருளாதார கூட்டணி என்ற அமைப்பை துவங்குவது குறித்து பேச்சு நடந்து வந்தது.’வீடியோ கான்பரன்ஸ்’உறுப்பு நாடுகள் இடையே, தாராள வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக, 2012ல் இருந்து, பேச்சு நடந்து வந்தது.
இந்த ஒப்பந்தத்தின் சில பிரிவுகளால், சீனாவில் இருந்து அதிக அளவில் உற்பத்தி பொருட்கள் இந்தியாவில் குவிக்கப்படும் அபாயம் இருந்தது. மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் இருந்து, வேளாண் மற்றும் பால் பொருட்கள் குவிக்கப்படும் அபாயமும் இருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் இருந்து, கடந்தாண்டில், இந்தியா வெளியேறியது. இந்நிலையில், ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 15 நாடுகள் தொடர்ந்து பேச்சு நடந்தின.வியட்நாம் தலைநகர் ஹானோயில், இறுதிகட்ட பேச்சு நேற்று நடந்தது. இதில், தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, 10 நாடுகள் உட்பட, 15 ஆசிய – பசிபிக் நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, கையெழுத்தானது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் இந்த பேச்சு நடந்தது.
கொரனா வைரஸ் பரவலால் பொருளாதார பாதிப்பை பெரும்பாலான நாடுகள் சந்தித்து வரும் நிலையில், தாராள வர்த்தகம் வாயிலாக, சீனா ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆசியான் அமைப்பில் உள்ள, புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ல், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், தாராள வர்த்தக நாடுகளான, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகியவையும் இதில் இணைந்துள்ளன.
இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய போது ஜப்பான் மற்றும் ஆசிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டனர் என்பது ஆனால் அவை தற்போது இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.
‘தற்போதுள்ள சர்வதேச சூழ்நிலையில், இந்த ஒப்பந்தம், புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது’ என, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சீன பிரதமர், லீ கேகியாங்க் கூறியுள்ளார்.
சர்வதேச, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்த, 15 நாடுகளின் பங்கு, 30 சதவீதமாக உள்ளது. அதனால், உலகின் மிகப் பெரிய தாராள வர்த்தக ஒப்பந்தமாக, இது பார்க்கப்படுகிறது.அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் நிர்வாகம், இந்த ஒப்பந்தத்தில் இணைய மறுப்பு தெரிவித்திருந்தார். தற்போது, ஜோ பைடன் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால், அமெரிக்காவும் இதில் இணைய வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது.













